மாநகராட்சி இன்ஜினியர் கொலையில் தொடர்ந்து மர்மம்: காரில் சென்ற முக்கிய நபர் யார்?
நெல்லை: நெல்லை மாநகராட்சி இன்ஜினியர் கொலையில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. இது தொடர்பாக அவரை காரில் அழைத்து சென்ற முக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாளையங்கோட்டை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். நெல்லை மாநகராட்சியில் தொழில் நுட்ப பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 27ம் தேதி இரவு காரில் குற்றாலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ராஜேந்திரன் கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்துவிட்டு அவரது உடலை மர்மநபர்கள் காரில் வைத்து விட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக குற்றாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த கொலையில் இதுவரை துப்பு கிடைக்கவில்லை.
ராஜேந்திரன் கொலை தொடர்பாக அவருடன் பணிபுரிந்த மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ராஜேந்திரனுக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து தினமும் மது அருந்துவார். 27ம் தேதி இரவு நண்பர்களுடன் குடித்து வி்ட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். 10.30 மணிக்கு பாளை ஜோதிபுரம் திடலில் ராஜேந்திரன் நின்று கொண்டிருந்த போது நெல்லையை சேர்ந்த முக்கிய நபர்கள் 4 பேர் காரில் வந்துள்ளனர்.
அந்த நேரத்தில் அவரது மனைவி ராஜேந்திரனை போனில் தொடர்பு கொண்டார். அப்போது 10 நிமிடத்தில் வந்து விடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் காரில் வந்த நபர்கள் அவரை தங்களுடன் வருமாறு அழைத்துள்ளனர். இதையடுத்து ராஜேந்திரன் அவருக்கு சொந்தமான காரில் புறப்பட்டபோது முக்கிய நபர் மட்டும் அவருடன் ஓன்றாக சென்றுள்ளார். மற்றவர்கள் அவர்கள் வந்த காரில் சென்றுள்ளனர்.
அதன் பின்னர் வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ராஜேந்திரனுக்கு அவரது மனைவி போன் செய்தபோது போன் ஓலித்தும் அவர் எடுக்கவில்லை. இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராஜேந்திரனை காரில் அழைத்து சென்ற முக்கிய நபர் யார் என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.