வழக்கில் சிக்கிய புனித் ராஜ்குமார், உபேந்திரா, தர்ஷன்.. என்ன பேசினார்கள்?
கோவை: காவிரி பிரச்சினையில் பிரிவினையை தூண்டும் வகையில் பேசிய கன்னட நடிகர்கள் புனித் ராஜ்குமார், உபேந்திரா மற்றும் தர்ஷன் ஆகியோர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோவை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவிரி பிரச்சினை காரணமாக கர்நாடக மாநிலம் மாண்டியாவில் கடந்த 9ம் தேதி விவசாயிகள் நடத்திய பொதுக்கூட்டத்தில் கன்னட நடிகர்கள் புனித் ராஜ்குமார், உபேந்திரா மற்றும் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்நிலையில், அப்போது அவர்கள் தமிழர்களுக்கு ஏதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், அவர்களது பேச்சு இந்திய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்ததாகவும் கோவையை சேர்ந்த இளங்கோவன் என்ற வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர் மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர், "கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் கன்னட சினிமா நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார்(வயது 41), மற்றும் கன்னட நடிகர்கள் உபேந்திரா என்ற உப்பி(47), தர்ஷன் தூகுதீபா(39) ஆகிய 3 பேரும் பேசினார்கள்.
காவிரி பிரச்சினையில் அரசாங்கம் எப்போதுமே தமிழகத்துக்கு தான் தண்ணீர் கொடுக்கிறது. நாம் சும்மாவே இருக்கிறோம். நாம் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். அவர்களுக்கு தண்ணீர் போவது போய் கொண்டே தான் இருக்கும். உச்ச நீதிமன்றம் சொல்வது சரி. ஆனால் இங்கே குடிக்கவே தண்ணீர் இல்லை. அங்கே விவசாயத்துக்கு கேட்கிறார்கள். எப்படி தர முடியும்?. இந்த முறை விடமாட்டோம். நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்' என்று அவர்கள் 3 பேரும் கன்னடத்தில் பேசினர்.
இவர்களின் பேச்சு போராட்டக்காரர்களை கலவரம் செய்ய தூண்டி வன்முறை ஏற்பட வழிவகுத்தது. இவர்களின் பேச்சு இந்திய தேசிய ஒற்றுமைக்கு குந்தகம் மற்றும் கேடு விளைவிக்கும் செய்கை ஆகும். தமிழ் மற்றும் கன்னட மொழி பேசும் மக்களிடையே வெறுப்பையும், பகையையும் வளர்க்கும் முயற்சியாகும். இதனால் கர்நாடக மாநிலம் முழுவதும் கலகம் ஏற்பட்டது. இதில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். தமிழக லாரிகள், பஸ்கள் மற்றும் வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
எனவே கன்னட நடிகர்கள் 3 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 124(ஏ)(தேச ஒற்றுமைக்கு விரோதமாக பேசுதல்), 153(கலகத்தை விளைவிக்கும் நோக்கத்தில் பேசுதல்), 153(ஏ)(மொழி ரீதியாக பிரிவினை ஏற்படுத்துதல்), 153(பி)(தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்த மனுவை ஏற்று 3 பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று கன்னட நடிகர்களின் பேச்சுக்கள் அடங்கிய வீடியோ ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் அவர் சமர்பித்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 3 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுமா, இல்லையா என்பது குறித்து அறிவிக்கப்படும் என நீதிபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ள இளங்கோவன், கோவை கணபதி மணியகாரம்பாளையம் ரவீந்திரநாத் தாகூர் வீதியை சேர்ந்தவர். இவர் தமிழ் தேசிய பேரமைப்பு தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.