கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் உள்பட ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா பரவியதாக தகவல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது- இவர்கள் அனைவரும் கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பியவர்கள் என்றும் தகவலகள் வெளியாகி உள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகம் தற்போது வரை இதை உறுதிப்படுத்தவில்லை.
கோயம்பேடு சந்தையில், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வேலை செய்து வருகிறார்கள். கொரோனா தொற்று பரவி வருவதன் காரணமாக அண்மையில் மொத்த விலைக்கடைகள் மட்டும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் மிகக்குறைந்தஅளவு பணியாளர்கள் தவிர பெரும்பலான கூலி தொழிலாளர்கள், வியாபாரிகள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு சென்றுவிட்டனர். அப்படி சென்ற பலருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக களம் இறங்கி கூலித்தொழிலாளர்களை தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து சொந்த ஊர் சென்றவர்களை கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகிறது. நேற்று ஒரு நாளில் கடலூரில் 122, விழுப்புரம் 49, சென்னையில் 266 , பெரம்பலூர், 25, அரியலூரில் 6 பேர் என ஏராளமானோருக்கு கொரோனா பரவியது. இவர்களில் பெரும்பாலோனோர் கோயம்படு சந்தை மூலம் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் ஆவர்.
இந்நிலையில் இன்றும் கோயம்பேடு சந்தையில் பணியாற்றியவர்கள் வழியாக விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா அதிகமாக பரவி உள்ளது. இந்த சூழலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 89-ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. .இன்று பாதிக்கப்பட்டவர்களில் 34 பேர் பெண்கள் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவலை மாவட்ட நிர்வாகமோ சுகாதாரத்துறையோ இதுவரை வெளியிடவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் அல்லது சுகாதாரத்துறை இன்று மாலைக்குள் கொரோனா பாதிப்பு விவரத்தை வெளியிடும். எனவே அதன்பிறகே மேற்கண்ட தகவலை உறுதி செய்ய இயலும்.












Click it and Unblock the Notifications