ராம்நாத்தை ஆதரிப்பது எடப்பாடியின் கையாலாகாத தனம்... முத்தரசன் சுளீர்
ஜனாதிபதி வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ்காரரான ராம் நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை ஆதரித்திருப்பது முதல்வர் பழனிச்சாமியின் கையாலாகாதத் தனம் என்று காட்டமாக பேசியுள்ளார் முத்தரசன்.
சென்னை: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை ஆதரித்து தமிழக முதல்வர் பழனிச்சாமி தனது கையாலாகாத தனத்தை காட்டிவிட்டார் என்று சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் காட்டமாக பேசியுள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக தனது வேட்பாளராக பிகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது.

போனில் ஆதரவு
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தமிழக முதல்வர் பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு முதல்வர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை ஆதரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பழனிச்சாமி ஆதரவு
இதனைத் தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார் முதல்வர். தமிழக முதல்வர் ராம்நாத் கோவிந்த்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.

திருமாவளவன் எதிர்ப்பு
இதற்கு கடும் கண்டனங்கள் தமிழக அரசியல் கட்சிகள் எழுப்பியுள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாஜக வேட்பாளரை ஆதரிக்கும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுவிட்டது என்றும் இது கண்டிக்கத் தக்கது என்றும் கூறியுள்ளார்.

கையாலாகாதத் தனம்
இதே போன்று சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், ராம்நாத் கோவிந்த் ஆர்.எஸ்.எஸ்சின் வளர்ப்பு. அவர் ஜனாதிபதியாக வருவது நாட்டிற்கே கேடு விளைவிப்பதாகும். அவரைப் போய் தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆதரிப்பது அவரது கையாலாகாதத் தனம்.

மாற்று வேட்பாளர்
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி மாற்று வேட்பாளரை நிறுத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை சிபிஐ செய்யும் என்று முத்தரசன் கூறினார்.












Click it and Unblock the Notifications