சட்டம் ஒழுங்கை சீர் செய்ய பன்னீர் செல்வம் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.. சிபிஎம் சாடல்
திருச்சி: சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட பின்னர் அவர் முதல்வர் பதவியை இழந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் செய்யவோ, முறைகேடுகளைத் தடுக்கவோ இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருச்சி பஸ் நிலையப் பகுதியில் நடந்த அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சியில்கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், அம்பேத்கரின் தீண்டாமை ஒழிப்பு லட்சியத்தையும், ஆதிதிராவிடர்களின் விடுதலையை லட்சியத்தையும் அமலாக்குவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பாடுபட்டு வருகிறது. தீண்டாமையை ஒழிப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி துணை நின்று தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. கடந்த ஒரு ஆண்டுகளில் 24 கவுரவ கொலைகள் நடந்து உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துகிற போது தீண்டாமை ஒழிப்புக்காக தொடர்ந்து போராட சபதம் ஏற்பதே சரி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கருதுகிறது.
ஜெயலலிதா பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு பொறுப்பேற்றுள்ள இந்த அரசு தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர் கொண்டு வரவோ, முறைகேடுகளை தடுக்கவோ இல்லை. முட்டை கொள்முதலில் முறைகேடு நடந்து வருகிறது.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு மக்கள் பிரச்சனைகளை தீர்க்க தவறிவிட்டது. போக்குவரத்து தொழிலாளர்களோ, ஆட்டோ தொழிலாளர்களோ கோரிக்கைகளை நிறைவேற்ற போராடுகிற போது அந்த சங்கத்தின் தலைவர்களை அழைத்து பேசி அரசு பிரச்சனையை தீர்க்க வேண்டும்.
ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாரா? என்பது குறித்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தெரிவிக்கப்படும் என்றார் அவர்.