500, 1000 ரூபாய் நோட்டுகளால் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் காட்ல மழை
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கருணை காட்டி போலீசார் விட்டுவிடுகின்றனராம்.
சென்னை: 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதில் யாருக்கு அதிர்ஷடம் என உங்களால் கணிக்க முடிகிறதா? சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்குத்தானாம்.
அதிரடியாக 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என கடந்த வாரம் பிரதமர் மோடி அறிவித்தது முதல் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பொது மக்கள் ஏராளமான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால், பணப் புழக்கத்தில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இதனைக் கவனத்தில் கொண்ட சென்னை போக்குவரத்து போலீசார், சிக்னல் மீறல், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் இல்லாமல் வண்டி ஓட்டுதல் போன்றவற்றுக்கு விதித்து வந்த அபராதக் கட்டணங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகின்றவர்களை மட்டும் தற்போதைய நிலையில் எச்சரித்து அனுப்புவதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாள்தோறும் 15 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பதியப்பட்டு வந்த நிலையில் தற்போது 2 ஆயிரம் வழக்குகள் மட்டுமே பதியப்படுவதாகவும் போலீஸ் அதிகாரிகள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விதி மீறி வானம் ஓட்டுகின்றவர்கள் 500, 1000 என அபராதம் செலுத்தி வந்த நிலையில் அந்த பண நோட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் தற்காலிகமாக வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.