கட்-அவுட் விவகாரம்: தேமுதிக எம்.எல்.ஏ. சுபா, குடும்பத்தார் 3 பேர் மீது வழக்கு
சேலம்: சேலத்தில் கோவில் திருவிழாவுக்கு கட்-அவுட் வைக்கும் பிரச்சனை தொடர்பாக தேமுதிக எம்.எல்.ஏ. சுபா மற்றும் அவரது குடும்பத்தார் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இருக்கும் சார்வாய் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் திருவிழா இன்று துவங்கியது. இந்த திருவிழா வரும் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி கிராமத்தினர் கெங்கவல்லி தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. சுபாவின் அப்பா பெரியசாமியின் வீட்டிற்கு அருகில் அம்மன் கட்-அவுட்டை வைக்க வியாழக்கிழமை இரவு ஏற்பாடு செய்தனர்.
கட்அவுட் வைக்க பெரியசாமியும், அவரது மனைவி சுசீலாவும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுசீலா இது குறித்து தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் புகார் கொடுத்தது குறித்து அறிந்த கிராமத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு எம்.எல்.ஏ. சுபாவை கைது செய்யக் கோரி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதை பார்த்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்குள் கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் வீரமணி, ஆத்தூர் டி.எஸ்.பி. சிவவேலியப்பன், இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சீனிவாசன் ஆகியோரும் அங்கு வந்து அவர்களை மறியலை கைவிடுமாறு கூறினர். ஆனால் மக்கள் மறியலை கைவிட மறுத்ததால் போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து மக்கள் சிதறி ஓடினர். அதில் சிலரை போலீசார் பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து மக்கள் மீண்டும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பிடித்து வைத்துள்ளவர்களை விடுவிக்குமாறு கூறினர். இந்நிலையில் எம்.எல்.ஏ. சுபா, அவரது கணவர் ரவி, பெற்றோர் பெரியசாமி, சுசீலா ஆகியோர் மீது போலீசார் வாக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் எதிர் தரப்பை சேர்ந்த 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.