வங்கக்கடலை மிரட்டும் "முதலை"... : வட தமிழகத்தில் மழை - தீபாவளியன்று சென்னைக்கு பாதிப்பு!
வங்கக்க டலை மிரட்டும் "முதலை" ... : வட தமிழகத்தில் மழை - தீபாவளியன்று சென்னைக்கு பாதிப்பு!
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள கியான்ட் எனப்படும் முதலை புயல் மேற்கு - தென்மேற்காக நகர்ந்து ஆந்திர கடற்கரையை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும், தீபாவளி நாளில் சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு - மத்திய வங்கக் கடலில் உருவான கியான்ட் புயல் விசாகப்பட்டினத்துக்கு கிழக்கு - தென்கிழக்காக 620 கிமீ தொலைவிலும், மச்சிலிப்பட்டினத்துக்கு கிழக்கு வடகிழக்காக 830 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
வங்க கடலிலிருந்து ஒடிசாவை நோக்கி மிரட்டிய, முதலை புயல், திசை மாறி, ஆந்திர மாநிலம் நெல்லுாரை நோக்கி நகர்ந்து வருவதால், அங்கு பதற்றம் நிலவுகிறது; சென்னை உட்பட, தமிழக கடலோர மாவட்டங்களுக்கு, மழை பெய்ய வாய்ப்புள்ளது.
முதலை புயல்
வங்க கடலில், ஒரு வாரமாக சுழன்று கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கியான்ட் புயலாக மாறியுள்ளது. மியான்மர் வைத்துள்ள கியான்ட் என்ற பெயருக்கு, முதலை என்று பொருள். இந்த புயல், செவ்வாய்கிழமை விசாகப்பட்டினம் மற்றும் ஒடிசாவின் கோபால்பூர் இடையிலான பகுதியை கடக்கும் என, கணக்கிடப்பட்டது. இப்போது இந்த புயல் ஆந்திராவை தாக்கும் அச்சம் எழுந்துள்ளது.
வானிலை எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், கியான்ட் புயல் கடந்த 6 மணி நேரத்தில் தனது பயண திசையை மாற்றி மேற்கு - தென்மேற்காக மணிக்கு 14 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து மேற்கு மத்தியப் பகுதியை கடந்து வங்கக் கடலின் மேற்கு - தென்மேற்குப் பகுதியை அடுத்த 72 மணி நேரத்தில் அடையும்.
ஆந்திராவில் கடக்கும்
இந்த புயல் மேற்கு வங்கம் - ஒடிசா இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆந்திராவை நெருங்கி வரும் இந்த கியான்ட் புயல் சனிக்கிழமையன்று ஆந்திர மாநிலத்தின் பிரகாசம் மாவட்டத்தில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
காக்கிநாடா, விஜயவாடா, குண்டூர், ஓங்கோல், காவ்லி, நெல்லுார், திருப்பதி ஆகிய இடங்களில், இன்று முதல் புயல் பாதிப்பால், மழை பெய்யலாம் என, வானிலை ஆய்வு
மையம் கணித்துள்ளது. இந்த புயல் காரணமாக வியாழக்கிழமை முதல் கடற்பரப்பில் காற்றின் வேகம் தீவிரமாக இருக்கும் என்றும், ஆந்திர மாநிலத்தில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தீபாவளி நாளில் சென்னையில் மழை
சென்னை உட்பட வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில், அக்டோபர் 29, 30ல் கனமழைக்கு வாய்ப்புள்ளது' என்று கூறியுள்ளது. கடந்த ஆண்டு மெக் புயலால் தீபாவளி நேரத்தில் நவம்பர் 8ம் தேதி தொடங்கி 3 நாட்கள் மழை கொட்டியது. இதனால் சென்னை, கடலூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. கடலூர் பெரும் துயரத்தை சந்தித்தது. இந்த ஆண்டு முதலை புயலால் தீபாவளி நாளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.