வலுவடைகிறது ரோனு புயல்: கனமழை எச்சரிக்கை- நாகையில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
சென்னை: தமிழகத்தை அச்சுறுத்திய புயல் ஒடிசாவை நெருங்கியுள்ளதால் அம்மாநிலத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ரோனு என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புயல் நாளை அல்லது நாளை மறுநாள் வங்கதேச பகுதியில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று தென்மேற்கு வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 3 நாட்கள் பலத்த மழை பெய்தது.
தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மத்திய மேற்கு வங்ககடலில் ஆந்திர மாநிலம் மற்றும் நெல்லூருக்கு தென்கிழக்கில் நிலை கொண்டது. இதனால் அந்த பகுதியில் பெய்த கனத்த மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அது புயல் சின்னமாக மாறி தற்போது ஒடிசாவை நெருங்கியுள்ளது.
ரோனு புயல்
ரோனு என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புயலால் ஒடிசா மாநிலத்தில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மைய இயக்குநர் சரத்சந்திர சாகு தெரிவித்துள்ளார். பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ஒடிசாவை நெருங்கும் புயல்
வங்கக் கடலில் உருவான இந்த ஆண்டின் முதல் புயல் சின்னத்துக்கு ரோணு (Roanu) என்று பெயரிடப்பட்டுள்ளது.
கலிங்கப்பட்டினத்தில் இருந்து 40 கி.மீ. தெற்கு - தென்கிழக்காக ரோணு மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வடக்கு ஆந்திரா, ஒடிசா கடற்கரைப் பக்கமாக சென்று கொண்டிருக்கிறது.
வங்கதேசத்தில் கரையை கடக்கும்
இந்த ரோணு புயல் சின்னம் மேலும் வலுப்பெற்று 21ம் தேதி மாலை அல்லது 22ம் தேதி அதிகாலையில் வங்கதேசம் அருகே கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் தெற்கேயுள்ள கடற்கரைப் பகுதியான கேப்புப்பாரா மற்றும் காக்ஸ் பஜார் இடையே இந்தப் புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு
ரோனு புயல் ஒடிசாவை நெருங்கி வருவதை அடுத்து நாகப்பட்டினம், வேளாங்கன்னி, கீழ்வேளூரில் நல்ல மழை பெய்துள்ளது. முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டினத்தில் 2ம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
குமரியில் கனமழை
குமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
ரப்பர் தொழில் பாதிப்பு
கனமழை காரணமாக அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களில் பால் சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
ரயில்சேவை பாதிப்பு
கனமழை காரணமாக பள்ளியாடு என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டதால் குமரியில் இருந்து திப்ரூகருக்கு செல்லும் ரயிலும், நாகர்கோயிலில் இருந்து மங்களூரு செல்லும் ரயிலும் செல்லவில்லை. அந்த வழித்தடத்தில் 7 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கனமழைக்கு வாய்ப்பு
புயல் சின்னம் வங்கதேசம் நோக்கி நகர்ந்தாலும், வடக்கு கடற்கரையோர ஆந்திரா, ஒடிசா பகுதிகளுக்கு புயல் ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக குமரி மாவட்டம் இராணியில் 24 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.