வர்தா புயல்... சென்னையில் ரூ1,000 கோடிக்கும் மேல் சேதம்!
சென்னையை வர்தா புயல் 3 கட்டங்களாக தாக்கியது. பகல் முழுவதும் தாக்கிய வர்தா புயலால் ரூ1,000 கோடிக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம்.
சென்னை: சென்னையை 3 கட்டமாக தாக்கிய வர்தா புயலால் ரூ1,000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல், மேற்குப் பகுதி- மையப் பகுதி- கிழக்குப் பகுதி என 3 கட்டங்களாக சென்னையை இன்று பிற்பகல் முதல் தாக்கியது.
இப்புயல் கரையை கடந்த போது அதிகபட்சமாக 192 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. சென்னையை பகல் முழுவதும் தாக்கிய அதிதீவிர வர்தா புயலால் எங்கெங்கும் சேதம்தான்..
வீடுகள், கட்டிடங்கள், மின்கம்பங்கள், மரங்கள் என சரிந்து விழுந்தன. சென்னை விமானம் நிலையம் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டுவிட்டது. சென்னையில் அனைத்து புறநகர் ரயில்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.
சென்னைக்கு வரும் வெளியூர் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுவிட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. புயல் அடித்த வேகத்தில் கார்கள் பறந்த காட்சிகளையும் சென்னைவாசிகள் அனுபவிக்க நேரிட்டது.
சென்னை நகரில் மட்டும் 3,000 மின் கம்பங்கள் விழுந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக வர்தா புயலால் சென்னையில் ரூ1,000 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சென்னையை 3 கட்டமாக தாக்கிய வர்தா புயலால் மொத்தமாக ரூ1,000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.