மாஜி அமைச்சர் அரங்காநாயகம் சொத்து குவிப்பு வழக்கு: 4 மாதத்தில் முடிக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் சொத்து குவிப்பு வழக்கை 4 மாதத்தில் முடிக்க கீழ் நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா ஆட்சியின் போது அரங்கநாயகம் கல்வி அமைச்சராக இருந்த போது அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்துள்ளது
1991 முதல் 1996 வரையிலான காலக்கட்டத்தில் ரூ.1.15 கோடிக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துச்சேர்த்ததாக 1996ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், அரங்க நாயகத்தின் மனைவி கலைச்செல்வி, மகன்கள் சந்தானபாண்டியன், முருகன் அதியமான் ஆகியோர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நீண்ட காலமாக விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என்றும் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் அரங்கநாயகம் உட்பட 4 பேரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை தனிக்கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதன் பின்னர், வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று மற்றொரு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்த 2 உத்தரவுகளையும் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அரங்கநாயகம் உட்பட 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி சி.டி.செல்வம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வக்கீல் சண்முகவேலாயுதம், மனுதாரர்கள் சார்பில் வக்கீல் மோகன்தாஸ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அரங்கநாயகம் சார்ப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தார்.
விடுவிக்க முடியாது
நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்ப கட்ட முகாந்திரம் உள்ளது. எனவே, இவர்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது. எனவே, வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்ற மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்.
19 ஆண்டுகால வழக்கு
இந்த வழக்கில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கும்போது, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்க முடியாது. எனவே வழக்கை ரத்து செய்ய கோரிய மனுக்களையும் தள்ளுபடி செய்கிறேன்.
இந்த வழக்கு 1996ம் ஆண்டு பதிவானது. தற்போது 2015ம் ஆண்டு நடக்கிறது. இத்தனை ஆண்டுகள் இந்த வழக்கை இழுத்தடித்தது யார்? வழக்கு முடிவுக்கு வராமல் இருப்பதற்கு யார் காரணம்? என்ற கேள்விகள் எல்லாம் எழுகிறது.
4 மாதத்தில் முடிங்க
எனவே, அரங்கநாயகம் உட்பட 4 பேர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை 4 மாதத்துக்குள் விசாரித்து தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும். இதற்காக இந்த வழக்கை தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்று தனி நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிடுகிறேன் என்று நீதிபதி கூறியுள்ளார்.
அதிமுக - திமுக
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் இருந்த அரங்கநாயகம் சில ஆண்டுகள் திமுகவில் இருந்தார். கடந்த 2010ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகிய அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்.
ஜெயலலிதா பாணியில்
1991-96 கால கட்டத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த செப்டம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. தனி நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டு பதவியிழந்த ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் முதல்வராக பதவியேற்றார். தற்போது கர்நாடகா அரசால் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த அரங்கநாயகத்தின் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீவிரமடைந்துள்ளது.