தமிழ்நாடு முழுவதும் கொட்டும் கனமழை- பலி எண்ணிக்கை 113 ஆக உயர்வு
சென்னை: தமிழகம் முழுவதும் தீவிரமாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை காரணமாக இது வரையி்ல் 113 பேர்பலியாகி உள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர் மழையால் நேற்று ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் 7 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தில் குளத்தில் மூழ்கி பாவாடை, வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே வீட்டின் சுவர் இடிந்து ஒருவர் உயிரிழந்தார். புலித்தாங்கல் கிராமத்தில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து அமுதா என்ற பெண் உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆகாரம் கிராமத்தில் குளிருக்கு கன்னியம்மாள் என்பவர் உயிரிழந்தார். காட்டுமன்னார்கோவிலில் மண் சுவர் இடிந்து முத்தையன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
கடலூரில் 55 பேர் பலி
கடந்த 1 வாரமாக பெய்து வரும் தொடர் மழையால் கடலூர் மாவட்டத்தில்தான் அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், வீடு இடிந்தும், மின்சாரம் தாக்கியும் அந்த மாவட்டத்தில் மட்டும் இதுவரை 55 பேர் பலியாகி உள்ளனர்.
விழுப்புரத்தில் 15 பேர் பலி
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 7ஆம் தேதி முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் மரக்காணம், திண்டிவனம், விழுப்புரம், வானூர், செஞ்சி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2 நாள்களில் மட்டும் மழைக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.
காஞ்சியில் 10 பேர் பலி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 பேர் மழை வெள்ளத்தில் இறந்துள்ளனர். இந்த மாவட்டத்தில் 32 செ.மீ. அளவுக்கு வெள்ளிக்கிழமை மழை பெய்துள்ளதால் பல பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியாமல் உள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயிரிழப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூர் பெரிய ஏரி நிரம்பி வழிவதால் அதை வேடிக்கை பார்க்கச் சென்ற 2 மாணவர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் இதுவரை கிடைக்கவில்லை.
உள் மாவட்டங்களில் உயிரிழப்பு
இதேபோல் மழைக்கு சென்னையில் 5 பேரும் நெல்லை மாவட்டத்தில் 8 பேரும் நாமக்கல் மாவட்டத்தில் 2 பேர்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 பேர்களும், சேலம் மாவட்டத்தில் 3 பேர்களும், திருவண்ணாமலை மாவட்டம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், நீலகிரி உள்பட தமிழகம் முழுவதும் மழைக்கு 113 பேர் பலியாகி உள்ளதாக போலீசார் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
கால்நடைகள் பலி
இதுதவிர ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் உயிரிழந்தன. கடலூர் மாவட்டம் முழுவதும் 385 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதிகளில் மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினரும், தீயணைப்பு வீரர்களும் படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.
வெள்ள அபாய எச்சரிக்கை
சூறாவளி காற்றின் வேகத்துக்கும், கரைபுரண்டு ஓடிய காட்டாற்று வெள்ளத்தின் வேகத்துக்கும் ஈடுகொடுக்க முடியாமல் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணி, குடிநீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.