ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய வழக்கு: இளங்கோவன், விஜயதரணி நேரில் ஆஜராக நாகர்கோவில் கோர்ட் உத்தரவு
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய வழக்கில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், விஜயதரணி எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் ஆஜராக நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குமரி மாவட்டம் கருங்கல் சந்தை திடலில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் விஜயதரணி எம்.எல்.ஏ. ஆகியோர் உரையாற்றினர்.
அப்போது அவர்கள் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசினர் என்று கூறி வழக்கறிஞர் ஞானசேகர் என்பவர் நாகர்கோவிலில் இருக்கும் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடர்ந்தார்.
இந்த வழக்குகளை அவசர வழக்குகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், ஜெயலலிதா நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரியும் அவர் இரண்டு மனுக்களை தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி(பொறுப்பு) ஜான் ஆர்.டி. சந்தோஷம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த அவர் அவதூறு வழக்கில் இளங்கோவன் வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதியும், விஜயதரணி ஏப்ரல் 11ம் தேதியும் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.