ராணுவத் தளவாடங்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு என்ற பெருமையை பெறுவோம்: நிர்மலா சீதாராமன்
ராணுவத் தளவாடங்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு என்கிற பெருமையை விரைவில் இந்தியா பெறும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : ராணுவ தளவாடங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடு என்கிற பெயர் விரைவில் மாறி, அதிக அளவு தளவாடங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த திருவிடந்தையில், இன்று முதல் 14ம் தேதி வரை ராணுவக் கண்காட்சி நடைபெறுகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் நடத்துகிறது.
ரூபாய் 480 கோடி செலவில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில் 47 நாடுகளைச் சேர்ந்த ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பங்குபெற உள்ளன. மேலும், கண்காட்சி அரங்கில் ராணுவத் தளவாடங்கள், பீரங்கிகள், ஏவுகணைகள், போர்க்கப்பல்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சியின் துவக்க விழா நிகழ்வில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறை சார்பில் முதல் முறையாக தமிழகத்தில் கண்காட்சி நடத்தப்படுகிறது. 'மேக் இன் இந்தியா' என்ற பிரதமரின் திட்டத்தில் இந்திய ராணுவத்துறையின் தளவாட பொருட்களை இந்தியாவிலேயே தயாரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ராணுவ தளவாட பொருட்களை, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது படிப்படியாக குறைக்கப்படும். மேலும், அந்த பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ, எச்.ஏ.எல்., பி.எச்.இ.எல்., போன்ற நிறுவனங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை ஊக்குவிக்கவே இந்த கண்காட்சி நடத்தபடுவதாகவும், நாளை சென்னை வரவுள்ள மோடி இந்த நிகழ்ச்சியை முறைப்படி துவங்கி வைப்பார் என்றும் தெரிவித்தார்.