சென்னையில் சுகேஷ்... இப்ப புரியுதா டெல்லி போலீஸ் ரகசியம்.. இது தான் கண்ணுல விரலை விட்டு ஆட்டுறது!
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்தர் சென்னை கொண்டுவரப்பட்டுள்ளார் என்கிறது டெல்லி போலீஸ்.
சென்னை: டிடிவி தினகரன் இரட்டைஇலை சின்னத்தை பெற்றுத்தருவதற்காக லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்தர் சென்னை கொண்டுவரப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் உறுதி செய்துள்ளது.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதற்காக 60 கோடி ரூபாய் பேரம் பேசி, முன்பணமாக 1 கோடியே 30 லட்சம் ரூபாய் தினகரனால் தரப்பட்டதாக சுகேஷ் சந்தர் என்பவர் தெரிவித்தார். டெல்லியில் கடந்த 16ம் தேதி இரவு புதிய ரூபாய் நோட்டுகளுடன் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்தரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்தது.
இதனையடுத்து நேற்று டெல்லி போலீஸ் சம்மன் அளிப்பதற்காக சென்னை வந்தது. முதலில் சுகேஷ் சந்தரும் அழைத்து வரப்படுவதாகக் கூறப்பட்ட நிலையில் அதிகாரிகள் மட்டுமே வந்துள்ளதாக தெரிவித்தனர்.
எனினும் ஏர்போர்ட்டில் டெல்லி போலீஸ் நேற்று நள்ளிரவு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியது. அதிகாரிகள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரியாமல் எரிச்சலடைந்த தமிழக போலீஸ் மற்றும் மீடியாக்களின் திகைப்புக்கான காரணம் இப்போது புரிந்து விட்டது. டெல்லி அதிகாரிகள் முன்னே சென்று விட்டு மீடியா, போலீஸ் ஏர்போர்ட்டை காலி செய்ததும் குற்றவாளி சுகேஷ் சந்தரை அழைத்துக் கொண்டு சென்னையில் ரகசிய இடத்தில் தங்க வைத்துள்ளனர்.
நீதிமன்றக் காவல் முடிந்தும் கோர்ட்டில் ஏன் ஆஜர்படுத்தவில்லை என்று டெல்லி நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அப்போதுதான் மர்மம் உடைந்தது. சுகேஷ் சந்தர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு சென்னையில் உள்ளார். எனவே அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது டெல்லி போலீஸ்.
சுகேஷ் சந்தர் உயிருக்கு ஆபத்து இருப்பதாலேயே ரகசியம் காக்கப்பட்டதாகவும், சம்மன் கொடுக்கச் சென்ற போலீசுக்கே தினகரன் ஆதரவாளர்களால் ஆபத்து இருப்பதாலேயே இந்த ரகசியம் காக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
டெல்லி போலீஸ் தில்லாலங்கடிகள்தான்!