எல்லா கறுப்புப் பணமும் வங்கிக்கு வந்துவிட்டது... எவ்வளவு என்று விரைவில் அறிவிப்பு.. வெங்கய்ய நாயுடு
வெளியில் இருந்த எல்லா கறுப்புப் பணமும் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.
சென்னை: பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் வெளியில் இருந்த எல்லா கறுப்புப் பணமும் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது என்றும் எவ்வளவு வந்து சேர்ந்தது என்பதை ரிசர்வ் வங்கி விரைவில் அறிவிக்கும் என்றும் சென்னை வந்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னை பாஜக அலுவலகத்தில் வெங்கய்ய நாயுடு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான போர் தொடங்கியுள்ளது. கறுப்புப் பணத்திற்கு எதிரான போர் தொடரும். கறுப்புப் பணத்திற்கும் ஊழலுக்கும் எதிரான போரின் தொடக்கம்தான் இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை. இந்தப் போர் தொடரும்.
சுதந்திரத்துக்குப் பிறகு எந்தப் பிரதமரும் கறுப்புப் பணத்துக்கு எதிராக போர் நடத்தவில்லை. இதற்கு முன் இருந்த எந்த அரசுக்கும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொள்ள துணிவில்லை. பணமதிப்பு நீக்க நடவடிக்கைதான் கறுப்புப் பணத்துக்கு எதிரான முதல் நடவடிக்கையாகும். மக்கள் வைத்த நம்பிக்கைக்கு ஏற்ப பிரதமர் மோடி செயல்படுகிறார்.
பணமதிப்பு ரத்து நடவடிக்கையால் அனைத்து ரொக்கமும் வங்கிகளுக்கு வந்து சேர்ந்து விட்டது. யார் யார் கணக்கில் கூடுதலாக பணம் வந்துள்ளது என்பதை கணக்கிட்டு நடவடிக்கை எடுக்கப்படும். வங்கிகளுக்குள் எவ்வளவு ரொக்கப் பணம் வந்துள்ளது என்பதை ரிசர்வ் வங்கி விரைவில் அறிவிக்கும்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ளது. இதனால் வரி கட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். புதிய இந்தியா உருவாவதில் நேர்மையானவர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்.
1998ம் ஆண்டிலேயே பினாமி சொத்து தடைச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுவிட்ட நிலையில் அமலுக்கு வராதது ஏன்? கறுப்புப் பண ஒழிப்பிற்கு காங்கிரஸ் ஆட்சியில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? பிரதமர் மற்றும் மத்திய அரசு மீது காங்கிரஸ் பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. பொருளாதார நிபுணராக மன்மோகன் சிங் இருந்தும் ஏன் கறுப்புப் பண ஒழிப்புக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று வெங்கய்ய நாயுடு கேள்வி எழுப்பினார்.