முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீர்- ஜிலேபி தந்து, பென்னிகுக் சிலையின் காலில் விழுந்த வைகோ
தேனி: 'பெரியாறு அணையில் 142 அடி நீர் தேங்கியுள்ளது எனது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி,' என தேனி மாவட்டம் லோயர்கேம்பில் வைகோ கூறியுள்ளார். பெரியாறு அணையில் தற்போது நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திய பின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் 152 அடியாக தேக்கலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று மாலை நீர்மட்டம் 141.60 அடியை எட்டியது. இன்று அணை நீர்மட்டம் 142 அடியை எட்டும். இந்நிலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பெரியாறு அணையை பார்வையிட அனுமதி கேட்டார். ஆனால் கேரளாவிற்குள் வைகோ செல்லும் போது சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் தமிழக போலீசார் அனுமதி தரவில்லை.
இதனால் நேற்று மதியம் 12 மணிக்கு லோயர்கேம்பில் உள்ள பென்னிகுவிக் மணி மண்டபத்திற்கு சென்ற வைகோ அங்கு பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து நீண்ட நேரம் பென்னிகுவிக் சிலையின் காலில் விழுந்து வணங்கினார்.
அதன்பின் லோயர்கேம்ப் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட குறுவனத்துப் பாலத்தில் நின்று பெரியாற்றில் மலர் தூவினார். அணையில் 142 அடி நீர் தேங்கிவிட்டது என்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அனைவருக்கும் ஜிலேபி வழக்கினார். தொடர்ந்து அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி மகிழ்ச்சியுடன் பேசினார்.
எனது வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான தினம் இது. பெரியாறு அணையை கட்டிய மாமனிதர் பென்னிகுவிக். பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக நடந்த போராட்டத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட ஜெயப்பிரகாஷ், ராமமூர்த்தி, இடிமுழக்கம் சேகர் ஆகிய மூன்று மாவீரர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
போராட்டத்திற்கு வெற்றி
பெரியாறு அணையின் மெயின் அணை முதலில் பலவீனமடைந்துவிட்டது என கேரள தரப்பில் புகார் கூறினர். பல்வேறு ஆய்வின் முடிவில் அணை பலமாக உள்ளது என தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் பின், அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்களிலும் பழுது ஏற்பட்டதாக புகார் கூறினர். அதனை இயக்கிப்பார்த்த மேற்பார்வை குழுவினர் ஷட்டர்களின் இயக்கம் நன்றாக உள்ளது, என தெரிவித்து விட்டனர். இந்நிலையில் அடுத்த கட்டமாக பேபி அணை பலமிழந்து விட்டதாக மேலும் ஒரு புகாரை கேரள அரசு சார்பில் முன்வைத்துள்ளனர். பெரியாறு அணையில் 142 அடி நீர் இன்னும் ஓரிரு நாட்களில் தேங்கிவிடும். அணையில் 142 அடி நீர் தேங்கியது, நான் மற்றும் எனது தொண்டர்கள், விவசாயிகள், பொதுமக்களுடன் நடத்திய மிகப்பெரிய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
152 அடி தேக்கலாம்:
பெரியாறு அணையில் தற்போது நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திய பின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் 152 அடியாக தேக்கலாம். இக்கூட்டதிற்கு வந்துள்ள கேரள பத்திரிகையாளர்களை நாங்கள் சகோதரர்களாகத்தான் நினைக்கின்றோம். ஆனால், அவர்கள் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபின் கேரள சட்டசபையைக்கூட்டி நீர்மட்டத்தை 136 அடியாக மீண்டும் குறைக்க வேண்டும் என எப்படி தீர்மானம் நிறைவேற்றினார்கள் என்பது தெரியவில்லை என்றார் வைகோ.
அதிமுக உடன் கூட்டணியா?
தொடர்ந்து பேசிய வைகோ, 'பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்குவதற்கான நடவடிக்கைக்கு தற்போதைய அ.தி.மு.க, அரசு உச்சநீதிமன்றத்தில் முறையாக மனு தாக்கல் செய்தது. காவிரி நீர் பிரச்னைக்கும் அ.தி.மு.க. அரசு முறையாக மனு செய்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், அ.தி.மு.க., அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்போம். உடனடியாக நாங்கள் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்று மட்டும் கூறிவிடாதீர்கள், என்றார் வைகோ.
காலில் விழுவதில் பெருமை
நான் இதுவரை எனது தாயை தவிர யார் காலிலும் விழுந்ததில்லை. தென்தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கிய ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுவிக் சிலையின் காலில் விழுவதை நான் பெருமையாக நினைக்கிறேன். அனைவரும் இவர் காலில் விழுந்து வணங்குங்கள். என்று அவர் உணர்ச்சி பொங்க பேசினார் வைகோ.
போக்குவரத்து நிறுத்தம்
லோயர்கேம்ப் மணி மண்டபத்திற்கு கோ சென்றதை அடுத்து நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தமிழக கேரள போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கேரளாவில் இருந்து இக்கூட்டத்திற்கு கேரள பத்திரிகையாளர்கள் வரக்கூடாது என்பதில் தமிழக போலீசார் முன்னெச்சரிக்கையாக இருந்தனர்.