ஜெயலலிதா உருவப்படத்துக்கு போலீஸ் டி.ஜி.பி, சென்னை கமிஷனர் அஞ்சலி
மறைந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: இந்திய காவல் பணி அதிகாரிகள் சங்கத்தின் தமிழக கிளை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகள் நட்பக வளாகத்தில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் மறைந்த ஜெயலலிதாவிற்கு தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மற்றும் கமிஷனர் எஸ். ஜார்ஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட காவல்துறை உயர் அதிகாரிகள் அனைவரும் மறைந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர், அவருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேசிய காவல்துறையின் உயர் அதிகாரிகள், ஜெயலலிதா காவல் துறையினரிடம் காட்டிய அன்பையும், பரிவையும் புகழ்ந்தனர். அவரது ஆட்சியின் போது காவல்துறையை எப்படி எல்லாம் மேம்பாடு அடையச் செய்தார் என்பதை விரிவாக அதிகாரிகள் பேசினார்கள். காவல்துறையில் ஜெயலலிதா அறிமுகம் செய்த முன்னோடி திட்டங்களில் சிறப்பு பாதுகாப்பு குழுமம், அனைத்து மகளிர் காவல்நிலையங்கள், பெண்கள் சிறப்பு காவல்படை பிரிவு, பெண்கள் கமாண்டோ பிரிவு கொண்டு வரப்பட்டது குறித்து போலீஸ் அதிகாரிகள் பேசினார்கள்.
இந்திய காவல் பணி அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குனர் கே.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு இந்திய காவல் பணி அதிகாரிகள் சங்கத்தின் தலைமை இயக்குனர், பயிற்சி மற்றும் தலைவர் கே.பி.மகேந்திரன் மற்றும் கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்களும் பங்கேற்றனர்.