தனுஷின் அங்க அடையாளங்கள் லேசர் மூலமாக அழிப்பு.. மருத்துவ அறிக்கையால் பரபரப்பு!
நடிகர் தனுஷ் வழக்கில் திடீர் திருப்பமாக அவரது உடலில் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை கூறுகின்றது.
மதுரை: நடிகர் தனுஷின் உடலில் அங்க அடையாளங்கள் லேசர் கருவி மூலமாக அழிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

வழக்கு விசாரணையின் போது கதிரேசன் -மீனாட்சி தரப்பில் சில சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த சான்றிதழ்களில் உள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளனவா? என கண்டறிய அவரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து நடிகர் தனுஷ் சார்பில் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வெளியிடப்பட்டது. சான்றிதழில் உள்ள அங்க அடையாளங்களை ஒப்பிட்டு பார்க்க, நீதிபதி சொக்கலிங்கம் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, நடிகர் தனுஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நேரில் ஆஜரானார்.
அதனைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனை டீன் வைரமுத்து ராஜா தலைமையில் 2 அரசு மருத்துவர் முன்னிலையில் தனியறையில் தனுஷூக்கு அங்க அடையாளங்கள் சரிபார்க்கும் பணி நடந்தது.
இந்தநிலையில் தனுஷ் அங்க அடையாளங்கள் அறிக்கையை மதுரை மருத்துவமனையின் டீன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார். அதில் நடிகர் தனுஷ் உடலில் உள்ள அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை முறையில் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இவ்வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணை மார்ச்-27 க்கு ஒத்திவைத்து நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார். இதன் மூலம் இவ்வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications