பிரகாஷ் ஜவடேகரை சந்திக்க அன்புமணி மறுப்பு: பாஜகவுக்கு கதவை சாத்திய பாமக
சென்னை: தமிழக பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகரை ஒருபோதும் சந்திக்கவே மாட்டேன் என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதன்மூலம் பாஜகவிற்கான கூட்டணி பேச்சுவார்த்தைக்கான கதவுகளை பாமக சாத்திவிட்டதாகவே கூறப்படுகிறது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி இன்றும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் திரைமறைவிலும், சில இடங்களில் பகிரங்கமாகவும் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் புது கணக்கு தொடங்க நினைக்கும் பாஜக, கடந்த லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகளை தக்க வைத்துக்கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை சென்னை வந்த தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர், சமக தலைவர் சரத்குமார், புதிய நீதிக்கட்சியின் ஏ.சி சண்முகம், ஐ.ஜே.கே கட்சித்தலைவர் பச்சைமுத்து, யாதாவ கட்சித்தலைவர் தேவநாதன் ஆகிய சிறு கட்சித்தலைவர்களை சந்தித்து பேசினார்.
28ம் தேதியன்று விஜயகாந்தை சந்தித்து பேசிய அவர், மீண்டும் கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு சென்னை வருவேன் என்று கூறி விட்டு டெல்லி சென்று விட்டார். இந்த நிலையில் பிரகாஷ் ஜவடேகர், நேற்று திடீர் பயணமாக சென்னை வருகை தந்தார். அண்ணா கல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்கவே சென்னை வந்ததாக அவர் கூறினார்.
ஆனால் சட்டசபை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தேமுதிகவிடம் இருந்தோ,பாமகவிடம் இருந்தோ பேச்சுவார்த்தைக்கான பச்சை சிக்னல் கிடைக்காத பாஜக ஜவடேகர் அப்செட் ஆனதாக கூறப்படுகிறது. தனது பயணம் தோல்வியில் முடிந்ததால் நேற்று மாலை 5 மணிக்கு ஜவடேகர் வெறும் கையுடன் டெல்லி திரும்பினார்.
தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக தெரிகிறது.
பிரகாஷ் ஜவடேகரின் வருகை பற்றியும், கூட்டணி பேச்சுவார்த்தை பற்றியும் அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த அன்புமணி, பிரகாஷ் ஜவடேகரை நான் சந்திக்கவில்லை, அவரை ஒருபோதும் சந்திக்கவும் மாட்டேன் என்று கூறினார். இந்த பதில் மூலம் அவர் கூட்டணிக்கான கதவை சாத்திவிட்டதாகவே தெரிகிறது.
பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி, மத்திய அமைச்சரை சந்திக்க மறுத்திருப்பது தமிழக பாஜக தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. முதல்வர் வேட்பாளராக அன்புமணியை ஏற்றால் மட்டுமே பாஜக உடன் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த ஒத்துக்கொள்வோம் என்று பாமக தலைவர் ராமதாஸ் கூறி வருகிறார்.
ஆனால் விஜயகாந்தை 'கிங்' ஆக ஏற்றுக்கொள்வோம் என்று கூறிய பாஜக தலைவர்கள், அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வோம் என்று இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
அதே நேரத்தில் அன்புமணி மீது இரு ஊழல் வழக்குகள் இருப்பதால்தான் மத்திய அமைச்சரவையில் அவரை சேர்க்கவில்லை. முதல்வர் வேட்பாளராக மட்டும் எப்படி ஏற்க முடியும் என்று பாஜக தலைவர்கள் கூறி வருகிறார்களாம்.
இது பாமகவை கடுப்பேற்றியது. எனவேதான் எங்கள் தலைமையை ஏற்று யாரேனும் கூட்டணிக்கு யாரேனும் வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் மிகவும் மகிழ்ச்சி என்று கடந்த வாரம் வண்டலூரில் நடந்த மாநாட்டில் பேசிய அன்புமணி ஆணித்தரமாக தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில்தான் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சென்னை வந்த மேலிட பொறுப்பாளர் ஜவடேகரை சந்திக்க அன்புமணி மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் நேர்காணல் முடிந்து ஒருமாத காலமாகியும் வேட்பாளர் பட்டியலை பாமக இன்னமும் வெளியிடவில்லை. ஒருவேளை அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு சம்மதித்தால் மட்டுமே பாஜக உடன் பேச்சுவார்த்தைக்கு பாமக சம்மதிக்கும் என்றும் அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின்னர் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு வேட்பாளர் பட்டியலை பாமக வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.