தினகரனைத் தேடும் புதுவை ரிசார்ட் உரிமையாளர்.. ரூ18 லட்சம் செலுத்தாமல் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கல்தா!
புதுவை சொகுசு ரிசார்ட்டுக்கு செலுத்த வேண்டிய ரூ18 லட்சத்தை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: புதுவை சொகுசு ரிசார்ட்டில் 19 எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்ததற்காக ரூ18 லட்சம் கட்டணத்தை செலுத்தாமல் தினகரன் தரப்பு கல்தா கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெங்களூரு சிறையில் சசிகலாவை நேற்று அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சந்திக்கும் முயற்சி நடக்கவில்லை. பொதுக்குழுவுக்கு எதிராக வெற்றிவேல் நடத்திய சட்டப் போராட்டமும் முடிவை எட்டவில்லை.
இதைவிடக் கொடுமை, புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியதற்கான கட்டணத்தை தினகரன் தரப்பினர் செலுத்தவில்லை. இதனால் ரிசார்ட் தரப்பில் நொந்து போய் உள்ளனர்' என்கின்றன புதுவை வட்டாரங்கள்.
முடிவு சொல்லாத ஆளுநர் மாளிகை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை என கையெழுத்து போட்டு, அ.தி.மு.கவின் 19 எம்.எல்.ஏக்களும் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதன்பேரில் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த ஆளுநர் அலுவலகம், தற்போது வரையில் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
புதுவையில் டேரா
ஆளுநரும் மும்பை கிளம்பிச் சென்றுவிட்டார். எம்.எல்.ஏக்களை பாதுகாப்பதற்காக புதுச்சேரியில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் அவர்களைத் தங்க வைத்தார் தினகரன். தங்க.தமிழ்ச்செல்வனின் பாதுகாப்பில் அவர்கள் இருந்தாலும், பெண் எம்.எல்.ஏக்கள் இருவர் போர்க்கொடி உயர்த்தியதாகத் தகவல் வெளியானது.
கர்நாடகாவில் ஜாகை
இந்நிலையில் தினகரன் தரப்பில் ஜக்கையன் எம்.எல்.ஏ அணி மாறியதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் உள்ள ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த ரிசார்ட் உரிமையாளர், மிகுந்த கவலையில் இருக்கிறாராம்.
ரூ18 லட்சம் வாடகை
ரிசார்ட்டில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியதற்கான மொத்த வாடகையான ரூ18 லட்சத்தை யாரிடம் வசூலிப்பது எனத் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறாராம். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய ரிசார் ஊழியர் ஒருவர், விழுப்புரத்தில் உள்ள முக்கிய அரசியல் புள்ளி சொன்னதன் பேரில்தான் தினகரன் ஆட்களுக்கு அறை ஒதுக்கப்பட்டது. 17 நாட்கள் அவர்கள் தங்கியிருந்ததற்கான மொத்த வாடகை முப்பது லட்ச ரூபாய். 25-ம் தேதியில் இருந்து 27-ம் தேதி வரையில் 100 அடி ரோட்டில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்ததற்கான கட்டணமான 7 லட்ச ரூபாயை அவர்களை செலுத்திவிட்டனர். அதன்பிறகு சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள விடுதியில் 27-ம் தேதியில் இருந்து 7-ம் தேதி வரையில் அவர்கள் தங்கியிருந்தனர். இதற்கான கட்டணத் தொகை 18 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய். இந்தப் பணத்தை 9-ம் தேதி செலுத்திவிடுவதாக எம்.எல்.ஏக்கள் உறுதியளித்திருந்தனர்.
நேரடி முறையீடு
ஆனால், விடுதியைக் காலி செய்துவிட்டுச் சென்றவர்கள், தற்போது வரையில் கட்டணத் தொகையை செலுத்தவில்லை. இவர்களுக்கு சிபாரிசு செய்த அரசியல் பிரமுகரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பாக இருந்த தங்க.தமிழ்ச்செல்வனிடமும் அவர்களால் பேச முடியவில்லை. எனவே, தினகரனை நேரடியாக சந்தித்து முறையிடுவது என ரிசார்ட் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறதாம்.