கைகோர்க்கப் போகிறார்களாம் தினகரனும், திவாகரனும்.. பெங்களூரில் நடந்த பரபர சமாதானம்!
சென்னை: அ.தி.மு.க யாருக்கு? என்ற கேள்விக்கு, தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லப் போகிறது? என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் சசிகலா குடும்பத்தினர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஆட்சியை வழிநடத்த வேண்டும் எனத் தீர்மானித்துள்ளனர். இதையொட்டி அவர்களுக்குள் சில விஷயங்கள் நடந்துள்ளன என்கின்றனர் மன்னார்குடி உறவுகள்.
திகார் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன், கட்சிப் பணியில் கவனம் செலுத்தப் போகிறேன் என அறிவித்தார் தினகரன். இதனை ஆளும்கட்சியின் சில அமைச்சர்கள் விரும்பவில்லை. 'கட்சியில் இருந்து அவரை ஒதுக்கி வைத்துவிட்டோம்' என ஜெயக்குமார் சொல்ல, 'அவரை ஒதுங்கியிருக்கச் சொல்ல நீ யார்?' எனப் பாய்ந்தார் எம்.எல்.ஏ தங்க.தமிழ்ச்செல்வன்.
அதேநேரம், ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராகச் சென்று தினகரனை சந்தித்தனர். நேற்றும் இரண்டு எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய மன்னார்குடி உறவினர் ஒருவர், "பெங்களூரு சிறையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சசிகலாவை சந்தித்தார் திவாகரன். தினகரன் ஆதரவு-எதிர்ப்பு குறித்து விவரித்தவர், ஆட்சிக்கு எதிரான மனநிலையில் இருந்த எம்.எல்.ஏக்களை என்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன். எடப்பாடி பழனிசாமி நமக்கு எதிராகச் செயல்பட மாட்டார். அமைச்சர்களும் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர். தினகரன் அமைதியாக இருந்தால் போதும்' என விவரித்துள்ளார்.
தினகரனை விட்டுக் கொடுக்காதா சசிகலா
சசிகலாவோ, 'அரசியல்ரீதியாக சில விஷயங்களை அணுகுவதற்கு தினகரன் நிச்சயம் தேவை. குடும்ப உறவுகளுக்கு எதிராக இனி அவர் செயல்பட மாட்டார். உங்களுக்குள் அடித்துக் கொண்டிருந்தால், எதிரிகளுக்கு இன்னும் சாதகமாகப் போய்விடும். நமது குடும்பத்தை ஒரே அடியாக வீழ்த்திவிடுவார்கள். நீங்கள் இருவரும் கரம் கோர்த்துவிட்டால், அ.தி.மு.கவை யாராலும் வீழ்த்த முடியாது.
எப்படி எதிர்க்கட்சிக்காரன் மதிப்பான்
நமக்குள்ளேயே ஒற்றுமை இல்லாவிட்டால், வெளியில் உள்ளவர்கள் நம்மை எப்படி மதிப்பார்கள்? எதிரிகளுக்குத்தான் வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறோம்' என உருக்கமாகப் பேசியிருக்கிறார். இதனையடுத்து, தினகரன் தரப்பிடம் திவாகரன் ஆட்கள் பேசியுள்ளனர். இந்த விவாதத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் இருந்துள்ளதாகச் சொல்கின்றனர்.
ஆட்சிக்கு எடப்பாடி.. கட்சிக்கு டிடிவி
பேச்சுவார்த்தையின் முடிவில், 'ஆட்சி அதிகாரத்தை எடப்பாடி பழனிசாமி கவனித்துக் கொள்வார். அவருடைய அதிகாரத்தில் நாம் தலையிடக் கூடாது. அமைச்சர்களும் சுதந்திரமாகச் செயல்பட விரும்புகின்றனர். அப்படியே நடக்கட்டும். கட்சியைப் பொறுத்தவரையில் தினகரன் வழி நடத்தட்டும்.
நமக்குத்தான் சாதகம்
அவர்தான் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். நமக்கு சாதகமாகத்தான் தேர்தல் ஆணையம் தீர்ப்பு அளிக்கும். கட்சி நிர்வாகத்தை அவர் வழிநடத்தட்டும். பன்னீர்செல்வம் பற்றி நாம் யோசிக்க வேண்டாம்' என விவாதித்துள்ளனர். இந்த முடிவுக்கு மூன்று தரப்பினரும் சம்மதம் தெரிவித்துவிட்டனர். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும்" என்றார் உறுதியாக.
இறங்கி வந்த திவாகரன்
தினகரன் மீதான கோபத்தில் இருந்து திவாகரன் இறங்கி வந்துள்ளதாக உறவினர்கள் பேச ஆரம்பித்துள்ளனர். நேற்று தங்க.தமிழ்ச்செல்வன் பேசும்போதும், ' கட்சியை தினகரன்தான் வழிநடத்துவார். அரசியலில் இருந்து ஓ.பி.எஸ் ஒதுங்கிக் கொள்வார்' எனப் பேசியிருப்பதையும் அரசியல் வட்டாரத்தில் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். 'அரசியலில் எதுவும் நடக்கலாம்' என்ற கணிப்பிலேயே, மன்னார்குடி உறவுகளின் பேச்சையும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.