தினகரன் எம்எல்ஏ பதவியை நெருங்கும் ஆபத்து.. ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல்?
சென்னை: சட்டமன்றத்தில் ஆளுநர் புரோஹித் உரை தொடங்குவதற்குள்ளாக தினகரனின் ஆட்டத்துக்கு முடிவு கட்டும் முடிவில் இருக்கிறார்கள் பா.ஜ.க நிர்வாகிகள். ' ஃபெரா வழக்குகளின் இறுதி விசாரணை முடிந்துவிட்டது. இந்த வழக்கில் கட்டாயம் சிறைக்குச் செல்வார் தினகரன். அவருடைய பதவியும் பறிக்கப்பட்டுவிடும்' என்கின்றனர் அ.தி.மு.கவினர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கிடைத்த படுதோல்வியை பா.ஜ.க நிர்வாகிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
டெபாசிட் பறிபோன கோபத்தில் இருக்கிறார் ஸ்டாலின். இரட்டை இலை இருந்தும் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் ஆளும் அ.தி.மு.க அமைச்சர்கள்.
பழைய வழக்குகள்
தினகரனின் நடவடிக்கைகளுக்குக் கடிவாளம் போடும்விதமாக அவர் மீதான பழைய வழக்குகளை தூசி தட்டிக் கொண்டிருக்கின்றனர் ஆளும்கட்சியினர். வெற்றிவேல், தங்க.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் அரசுக்கு எதிராகப் பேசும் வார்த்தைகளை எல்லாம் உளவுத்துறை அதிகாரிகள் தொகுத்து வருகின்றனர். வெற்றிவேல் மீது தேர்தல் விதிகளை மீறிய வழக்கில் ஆணைய அதிகாரிகளே பழைய வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி விண்ணப்பித்தார் வெற்றிவேல். இந்த மனுவும் ஜனவரி முதல் வாரத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டுவிட்டது.
தெரிந்த விஷயம்
நேற்று சட்டமன்றத்தில் எம்.எல்.ஏவாக பதவியேற்ற பிறகு பேசிய தினகரன், ' ‘சசிகலா தலைமையிலான அ.தி.மு.க.தான் உண்மையான அ.தி.மு.க இதை நிரூபிக்கும் வகையில் தமிழக மக்கள் சார்பில் ஆர்.கே.நகர் மக்கள் என்னை வெற்றிபெறச் செய்து மாபெரும் தீர்ப்பை வழங்கியுள்ளனர். ஜெயலலிதா விட்டுச் சென்ற பொறுப்பை நான் தொடர்வேன். தற்போது உள்ள துரோக ஆட்சியை, செயல்படாத ஆட்சியை, முதுகெலும்பில்லாத ஆட்சியை, கைக்கூலிகளின் ஆட்சியை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்காகக் கிடைத்த வெற்றிதான் ஆர்.கே.நகர் தேர்தல். வெறும் சின்னமும் கட்சியும் இருந்தால் போதாது' எனக் கொதித்தார். " அவர் இப்படிப் பேசுவார் என்பதையும் ஆளும்கட்சியினர் அறிந்து வைத்திருந்தனர். அவரது பேச்சுக்களை எடப்பாடி அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை" என விவரித்த ஆளும்கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர்,
அந்நிய செலாவணி மோசடி
" தினகரன் மீதான வழக்குகள் அவரை நெருக்கிக் கொண்டிருக்கிறது. 1996ம் ஆண்டில் இங்கிலாந்து, பார்க்லே வங்கியில் 72 கோடி வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டது. இதன்பேரில் 1996ம் ஆண்டு தினகரன் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை 32 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. மேல் முறையீட்டில் அது 28 கோடியாக குறைக்கப்பட்டது. அபராதத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தினகரன். இந்த வழக்கில் 6.1.2017-ம் தேதி தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், ‘28 கோடி ரூபாய் அபராதத் தொகை விதித்தது சரிதான்' என உத்தரவிட்டது.
பணம் செலுத்த பயம்
இதனை எதிர்த்து மனு மேல் மனு போட்டுக் கொண்டிருக்கிறார் தினகரன். இந்தப் பணத்தை அவர் இன்னமும் செலுத்தவில்லை. தொகையை உடனடியாகக் கட்டுமாறு உச்ச நீதிமன்றம் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம். அப்படி பணத்தைச் செலுத்தினாலே தினகரன் குற்றவாளி என்பது நிரூபணமாகிவிடும். எம்.எல்.ஏ பதவிக்கும் சிக்கல் வந்து சேரும். அதனால்தான் பணம் கொட்டிக் கிடந்தும் நீதிமன்றத்துக்குச் செலுத்த பயப்படுகிறார். அதேபோல், அவர் மீதான அமலாக்கத்துறை தொடர்ந்த ஃபெரா வழக்குகளின் இறுதி விசாரணை முடிந்துவிட்டது. இந்த வழக்கில் கட்டாயம் சிறைக்குச் செல்வார் தினகரன். மீண்டும் ஒரு இடைத்தேர்தலை ஆர்.கே.நகர் மக்கள் சந்திக்க இருக்கின்றனர்" என்றார் விரிவாக.
குருமூர்த்திக்கு கோபம்
'ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் ஒரு இடைத்தேர்தல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தினகரனுக்கு இருக்கிறது' என்று நேற்று பேட்டியளித்தார் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன். சசிகலாவால் வளர்க்கப்பட்ட மணியனே இவ்வாறு கூறுவதைத்தான் தினகரன் ஆதரவாளர்கள் உற்று கவனிக்கின்றனர். " தினகரனின் வெற்றியால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது ஆடிட்டர் குருமூர்த்திதான். தேர்தல் ஆணையம், பறக்கும்படை, ஆளும் அரசு என அனைத்து இயந்திரங்களும் களமிறக்கப்பட்டன. அதையும் மீறி வெற்றிகரமாக தினகரன் வலம் வருவதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதன்விளைவாகத்தான் மிடாஸ் நிறுவனத்தில் ரெய்டு நடந்தது. இதனைத் தொடர்ந்து தினகரனைக் கைது செய்யும் வேலைகள் தீவிரமடைய உள்ளன" என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர்.