அதிமுகவுக்கு உரிமை கோரல்: ஜெ.வுக்கு திவாகரன் பாதுகாப்பு தரும் படங்களை தொடர்ந்து வெளியிடும் ஜெயானந்த்
ஜெ. அதிமுகவில் பதவியில் இல்லாத காலத்திலேயே பாதுகாப்பு தந்தது நாங்களே என திவாகரன் மகன் ஜெயானந்த் சில புகைப்படங்களை ரிலீஸ் செய்து வருகிறார்.
சென்னை: அதிமுகவுக்கு சசிகலா குடும்பம் உரிமை கோரும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக ஜெயலலிதாவின் பாதுகாப்பு திவாகரன் சென்ற பழைய படங்களை அவரது மகன் ஜெயானந்த் ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.
ஜெயலலிதா மறைந்த உடனேயே அதிமுகவுக்கு உரிமை கோர தொடங்கியது சசிகலா குடும்பம். ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே சசிகலாவின் கணவர் நடராஜன், ஜெயலலிதாவால் அதிமுகவை வழிநடத்திச் செல்ல முடியும் என்று எம்ஜிஆர் மறைந்தபோதே நாங்கள்தான் முன்னிறுத்தினோம்.
அதிமுகவுக்கு உரிமை
அதிமுக பிளவுபட்ட நிலையில் இரு அணிகளும் இணைவதற்கும் இரட்டை இலையை மீட்பதற்கும் நாங்களே முயற்சி செய்தோம் என கூறினார். அதனைத் தொடர்ந்து தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நடராஜன், திவாகரன் ஆகியோர் அதிமுகவுக்கு உரிமை கோரினர்.
குடும்ப ஆட்சி பிரகடனம்
இதில் உச்சகட்டமாக, எங்கள் குடும்பம்தான் அதிமுகவையும் ஜெயலலிதாவையும் பாதுகாத்தது. ஆகையால் நாங்கள் குடும்ப ஆட்சியைத்தான் செய்வோம் என பிரகடனம் செய்தார் நடராஜன். ஆனால் மக்களின் மனநிலை இதற்கு நேர் எதிராக இருந்தது.
மக்கள் எதிர்ப்பு
ஒருகட்டத்தில் சசிகலாவும் பின்னர் தினகரனும் அதிமுகவை கைப்பற்றி முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட துடித்தனர். இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் திவாகரன் தரப்பு திரைமறைவில் காய்களை நகர்த்தி வருகிறது.
திவாகரன் படங்கள் ரிலீஸ்
இதன் ஒருபகுதியாக ஜெயலலிதா அரசியலில் நுழைந்த காலங்களில் சசிகலாவின் தம்பி திவாகரன் பாதுகாப்பு கொடுத்தார் என்பதற்கான ஆதாரங்களாக சில புகைப்படங்களை "# My dad and honourable Amma" என்ற ஹேஷ்டேக்குடன் அவரது மகன் ஜெயானந்த் வெளியிட்டு வருகிறார். அண்மையில் தாம்நேரடி அரசியலுக்கு வரப் போவதாகவும் ஜெயானந்த் கூறியிருந்தார்.
அதிகளவில் ஷேர்
தற்போது "'அப்போது அம்மா கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளரும் இல்லை தமிழகத்தின் முதலமைச்சரும் இல்லை...அப்போது எங்கு சென்றது ஒரு சில கூட்டங்கள்?" என்ற வாசகத்துடன் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பாக திவாகரன் பின்னே வரும் ஒரு புதிய படத்தையும் ஜெயானந்த் வெளியிட்டுள்ளார். இந்த படங்கள் நூற்றுக்கணக்கில் திவாகரன் ஆதரவாளர்களா சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.