இடஒதுக்கீட்டை மாநில அரசுகளே முடிவு செய்ய உரிமை வழங்க வேண்டும்: கி.வீரமணி
சென்னை: இடஒதுக்கீட்டை மாநில அரசுகளே முடிவு செய்ய உரிமை வழங்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் 69% இடஒதுக் கீட்டைப் பாதுகாப்பது தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உட்பட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இதுதொடர்பான விளக்கத்தை தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.
தமிழக அரசு, திறமையான மூத்த வழக்கறிஞர்களை நியமித்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடி, 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் யாருக்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று முடிவு செய்யும் உரிமையை மாநில அரசுகளுக்கே வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இவ்வாறு கி.வீரமணி கூறினார்.