விஜயகாந்த் நாளை திருப்பதி பயணம்? உறுதியானது தேர்தல் கூட்டணி!
சென்னை: திருப்பதி சென்றால் திருப்பம் ஏற்படும் என்பார்கள். தேமுதிக தலைவர் விஜயகாந்த், திருப்பதி சென்று வந்தாலே தேர்தலில் யாருடன் கூட்டணி என்று அறிவித்து விடுவார் என்பது அந்த கட்சி தொண்டர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாளை சனிக்கிழமையன்று தனது குடும்பத்தினருடன் விஜயகாந்த் செல்லவிருப்பதாக தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருப்பதி தரிசனம் முடித்து சென்னை திரும்பியதும், கூட்டணி அறிவிப்பை வெளியிட உள்ளார். அனேகமாக, வரும், 8ம் தேதி நிறைந்த அமாவாசை நாள் என்பதால், அன்றைய தினம் கூட்டணியை உறுதியாக அறிவிப்பார் என்று தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கூட்டணிக்கு அழைப்பு
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இருமாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் மெல்ல மெல்ல பரபரப்படைந்து வருகிறது. ஆளும்கட்சியினர் சாதனைகளை விளக்கி பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். அதிமுகவை வீழ்த்த தே.மு.தி.க அவசியம் என்பதை உணர்ந்து அக்கட்சியிடன் கூட்டணி அமைக்க, திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விரும்புகின்றனர்.
கேப்டன் மவுனம்
தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடப்போகிறேன் என்று இந்த நிமிடம் வரைக்கும் விஜயகாந்த் அறிவிக்கவில்லை. அவரது மவுனம் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக உடன் கூட்டணி உறுதியாகிவிட்டதாகவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவற்றை விஜயகாந்த் மறுத்துள்ளார்.
பாஜக உடன் பேச்சு
கூட்டணிக்கு பாஜக பகிரங்கமாக அழைப்பு விடுத்த நிலையில், மத்திய அமைச்சர் ஜாவடேகர், சனிக்கிழமையன்று விஜயகாந்தை சந்தித்து, கூட்டணி குறித்து பேசினார். ஆனால், எந்த முடிவும் எட்டப்படவில்லை.
மாவட்ட செயலாளர்கள் விருப்பம்
வேட்பாளர்கள் நேர்காணலின் போது விஜயகாந்த், கூட்டணி பற்றி கேட்ட கேள்விகளுக்கு பலரும், திமுக கூட்டணியை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறினார்களாம்.
ஆனாலும் சொந்த கட்சியினருக்கும் பிடிகொடுக்காமல், விஜயகாந்த் பேசி அனுப்பி வைத்தாராம்.
பணம் கட்ட உத்தரவு
தேமுதிகவின் வேட்பாளர் நேர்காணலின்போது விருப்ப மனு அளித்தவர்களிடம் தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்ய முடியும் என்று விஜயகாந்த் கேட்டிருந்தார். ஒவ்வொருவரும் ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் என்று கூறியிருந்தனர். அந்தப் பணத்தை மார்ச் 5ம் தேதிக்குள் கட்ட வேண்டும் என்று விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிட சீட்டு கிடைக்காதவர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
வேட்பாளர்களுக்கு டெஸ்ட்
தனித்து போட்டியோ, கூட்டணியோ எத்தனைபேர் தலைமையை நம்பி பணம் கட்டுகிறார்கள் பார்ப்போம் என்று பரிசோதிக்கும் விதமாகவே விஜயகாந்த் இதனை தெரிவித்துள்ளார் என்று தேமுதிக நிர்வாகிகள் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. கேப்டன் வைத்த டெஸ்டில் எத்தனை பேர் பாஸ் ஆகிறார்களோ அவர்களுக்கு உறுதியாக சீட் கிடைக்குமாம்.
கேப்டனை நம்பிச்செல்வோம்
தலைவர் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றுதான் நேர்காணலின் போது பலரும் கூறியுள்ளனர். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே, தேமுதிகவின் ஊடகப் பிரிவு சார்பில் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், நம்பிக்கைக்கு நம்பிக்கை ஊட்டுவோம், கேப்டனை நம்பிச் செல்வோம் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. திமுக கூட்டணிக்குப் போவதை உணர்த்தும் வகையிலேயே விஜயகாந்த் இந்த வாசகத்தை இடம்பெறச் செய்வதாக தேமுதிக வட்டாரங்கள் கூறுகின்றன.
திருப்பதி தரிசனம்
இது ஒருபுறம் இருக்க விஜயகாந்த் நாளைய தினம் குடும்பத்துடன் திருப்பதி செல்ல திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் கூட்டணி உறுதியாகிவிட்டதாகவே தேமுதிகவினர் பேசிக்கொள்கின்றனர். வழக்கமாக, கூட்டணி இறுதியாகும்போது, தன் இஷ்ட தெய்வமான, திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வது, விஜயகாந்த் வழக்கம். கடந்த, 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தல், 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போதும், இதே நடைமுறையை விஜயகாந்த் பின்பற்றினார்.
மகாசிவராத்திரி
7ம் தேதி மகாசிவராத்திரி தினத்தில் கூட்டணி பற்றிய அறிவிப்பையும், தொகுதிகளையும் விஜயகாந்த் உறுதி செய்வார் என்றும், மறுநாள் மார்ச் 8ம் தேதி வேட்பாளர் பட்டியலை விஜயகாந்த் வெளியிடுவார் என்றும் தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.