யார் கூட சேரலாம்?.. விஜயகாந்த்தின் நேர்காணல் + கருத்துக் கேட்பு ஓவர்
சென்னை: நேர்காணல் என்ற பெயரில் தற்போது விஜயகாந்த் மற்றும் அவரது கட்சிக் குழுவினர் நடத்தி வரும் கருத்துக் கேட்பு இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
லோக்சபா தேர்தலில் போட்டியிட பணம் கட்டி விருப்ப மனு கொடுத்தவர்களிடம் விஜயகாந்த், அவரது மச்சான் சுதீஷ் தலைமையிலானோர் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.
ஒரு நாளைக்கு பத்து தொகுதிகள் என்று பிரித்து வைத்துக் கொண்டு நேர்காணல் நடக்கிறது. இருப்பினும் இந்த நேர்காணலின்போது யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்தும் முக்கியமாக விஜயகாந்த் கருத்து கேட்பதாகவும் கூறப்படுகிறது.
கோயம்பேடு...
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில்தான் இந்த நேர்காணல் நடந்து வருகிறது.
முதலில் தஞ்சாவூர் முதல் திருவண்ணாமலை
முதல் நாளான 9ம் தேதி தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், சிதம்பரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை தொகுதியைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடந்தது.
அடுத்து கொங்கு மண்டலம்
அடுத்த நாள், அதாவது பிப்ரவரி 10ம் தேதி நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், திருச்சி, பெரம்பலூர் தொகுதியைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.
11ம் தேதி தென் மண்டலம்
3வது நாளான 11ம் தேதி அதாவது நேற்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை தொகுதியைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடந்தது.
இன்றே கடைசி
கடைசி நாளான இன்று வேலூர், ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம் (தனி), திருவள்ளூர் (தனி), வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை மற்றும் புதுச்சேரி தொகுதிகளுக்கு நேர்காணல் நடக்கிறது. அத்தோடு முடிகிறது நேர்காணல்
யார் யார்...
நேர்காணல் செய்யும் குழுவில் விஜயகாந்த், சுதீஷ் தவிர பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் ஆகியோரும் அடங்கியிருந்தனர்.
என்ன கேட்கிறார்கள்...
இந்த நேர்காணலின்போது தொகுதியில் உங்களது செல்வாக்கு என்ன, கட்சிக்காக என்ன போராட்டங்களில் ஈடுபட்டீர்கள். செலவு செய்யக் கூடிய தகுதி எப்படி, யாருடன் கூட்டணி சேரலாம் என்று கருதுகிறீர்கள் என்பது உள்பட பல விஷயங்களையும் அலசி ஆராய்ந்து கேள்வி கேட்டார்களாம்.
அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்...
நேர்காணல் முடிந்த பிறகு விஜயகாந்த் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒரு வேளை ...
அதிரடியாக 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தனித்துப் போட்டி என்று அறிவிப்பாரா அல்லது இன்னாருடன் கூட்டணி என்று சொல்வாரா என்பது தெரியவில்லை.
பொறுத்திருந்து பார்ப்போம்...