விஜயகாந்த் தனித்துப் போட்டி அறிவிப்பு- மா.செ.க்கள் கடும் அதிருப்தி- வலை வீசுகிறது திமுக?
சென்னை: சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளதற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் மே 16-ந் தேதி நடைபெறுகிறது. மே 19-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு எதிராக மெகா கூட்டணியை அமைக்க திமுக முயற்சித்தது.
இதன் முதல் கட்டமாக திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணி அறிவிக்கப்பட்டது. இக்கூட்டணியில் தேமுதிகவும் சேர அழைப்பு விடுக்கப்பட்டது. தேமுதிகவிலும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், திமுக கூட்டணியில் சேர்ந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனால் விஜயகாந்த், அவரது மைத்துனர் சுதீஷ் ஆகியோர் திமுக தரப்புடன் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தனர். ஆனால் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
இந்நிலையில் விஜயகாந்த் திடீரென தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அதே நேரத்தில் பிரேமலதாவோ, விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என புதிய அறிவிப்பை வெளியிட்டார். இதனால் தேமுதிக தனித்து போட்டியா? தனி அணி அமைத்து போட்டியா? என்ற புதிய குழப்பம் உருவானது.
விஜயகாந்தின் இந்த புதிய முடிவு தேமுதிக மாவட்ட செயலாளர்களை கடும் அதிருப்தியடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தனித்தோ அல்லது தனி கூட்டணி அமைத்தோ போட்டியிட்டாலும் கடந்த 2011 சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியைப் போல பெறவே முடியாது என்பது அவர்களது கருத்தாக இருக்கிறது. இந்த அதிருப்தி மாவட்ட செயலாளர்களை வளைக்கின்ற முயற்சிகளையும் திமுக மும்முரமாக மேற்கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே 8 எம்.எல்.ஏ.க்களை அதிமுகவுக்கு தாரை வார்த்துக் கொடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்திருக்கும் விஜயகாந்த்துக்கு இப்போது திமுக புதிய தலைவலியை கொடுக்க இருப்பதால் அக்கட்சியில் சலசலப்புகள் விரைவில் அரங்கேறும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.