கொள்ளையடித்த திருப்பூர் தேமுதிக பிரமுகர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
திருப்பூர்: திருப்பூரில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியம் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
உடுமலைப்பேட்டையில் பொதுமக்களிடம் வழிப்பறி, கொள்ளை, நகைப் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 7 பேருக்கு உதவி செய்ததாக உடுமலையைச் சேர்ந்த மேலும் 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
அத்துடன் இவர்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாகவும், அனைவருக்கும் அடைக்கலம் கொடுத்ததாகவும் திருப்பூர் தெற்கு மாவட்ட தேமுதிக துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியத்தையும் போலீசாரால் கைது செய்தனர்.
உடுமலை ராமசாமி நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி மீது நாகரத்தினக் கல் மோசடி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் அவரை குண்டர்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.