ஐபிஎஸ் ஆபிசருங்களே... விஜயகாந்த் படத்தை பாருங்க- அடுத்து நாங்கதான் ஆளுங்கட்சி பிலேமலதா
ஐ.பி.எஸ். அதிகாரிகள் எப்படி கடமையாற்ற வேண்டும் என்பதை விஜயகாந்த் நடித்த சினிமா படங்களை பார்த்து கற்றுக் கொள்ளவேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி : இரண்டாக உடைந்த அதிமுக இனி இணையாது. இரட்டை இலை சின்னமும் கிடைக்காது. இதனால் அதிமுக இனி ஆட்சிக்கு வர முடியாது. தே.மு.தி.க. விரைவில் மாநிலத்தை ஆளும்கட்சியாக மாறும் என்று அக்கட்சியின் மாநில மகளிரணி தலைவி பிரேமலதா கூறியுள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரிகள் எப்படி கடமையாற்ற வேண்டும் என்பதை விஜயகாந்த் நடித்த சினிமா படங்களை பார்த்து கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
குமரி மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் ஜெகநாதனை திருவட்டார் போலீசார் ஒரு வழக்கில் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், காவல்துறையினரை கடுமையாக சாடினார். குமரி மாவட்டத்தில் மக்கள் பணியாற்றி வந்த மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு தீவிரவாதியை போல அவரை இழுத்துச் சென்றுள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.

ஐபிஎஸ் அதிகாரி
ஜெகநாதனை கைது செய்த அதிகாரி இப்போதுதான் ஐபிஎஸ் முடித்து பயிற்சியில் இருக்கிறார். இவரது நடவடிக்கை மூலம் ஐபிஎஸ் பணியில் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரிகள் எப்படி கடமையாற்ற வேண்டும் என்பதை விஜயகாந்த் நடித்த சினிமா படங்களை பார்த்து கற்றுக் கொள்ளவேண்டும்.

ஐபிஎஸ் ஆக ஆசைப்பட்டேன்
நானும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டுமென்று ஆசைப்பட்டேன். ஆனால் என் குடும்பத்தினர் என்னை விஜயகாந்திற்கு திருமணம் செய்துகொடுத்தனர். இப்போது நான் நாட்டை ஆளும் தலைவருடன் இருக்கிறேன். ஐபிஎஸ் அதிகாரி ஆகாமல் இருந்ததற்கு நன்றி கூறுகிறேன். ரமணா படத்தை பார்த்த மலேசிய அதிகாரி ஒருவர் விஜயகாந்துதான் எனது ரோல்மாடல் என்று தெரிவித்துள்ளார்.

அதிமுகவிற்கு சரிவு
ஆர்.கே.நகரில் தொப்பி போட்டு திரிந்தவர்கள் எல்லாம் இப்போது திகார் ஜெயிலில் இருக்கிறார்கள். அதிமுக சின்னத்தை இழந்து நிற்கிறது. முதல்வர் பதவி யாருக்கு? பொதுச் செயலாளர் பதவி யாருக்கு என்று அதிமுகவினர் போட்டி போடுவதால் இரண்டாக உடைந்த அந்த கட்சி இனி இணையாது. இரட்டை இலை சின்னமும் கிடைக்காது. இதனால் அதிமுக இனி ஆட்சிக்கு வர முடியாது.

ஞானம் வந்ததா?
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று அவரது சமாதியில் அரை மணி நேரம் தியானம் செய்த பிறகு ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஞானம் பிறந்து உள்ளது. 75 நாட்கள் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அவருக்கு ஞானம் வரவில்லை. முதல்வர் பதவி பறிபோன பிறகு தான் ஞானம் பிறந்துள்ளது.

எல்லாம் மர்மம்
ராம மோகனராவ் வீட்டில் நடந்த சோதனை. கொடநாடு காவலாளி கொலை, கார் டிரைவர் சாவு போன்றவற்றில் மர்மம் உள்ளது. நீட் தேர்வு மூலம் தரமான கல்வி கிடைக்கும் என்று நாங்கள் ஏற்கனவே கூறி வருகிறோம். நீட் தேர்வை அரசியலாக்க விரும்ப வில்லை.

திமுகவிற்கு முற்றுப்புள்ளி
2011, 2016ல் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாமல் முற்றுபுள்ளி வைத்தது தேமுதிகதான். தற்போதைய ஆட்சி விரைவில் கவிழ்வது உறுதி. தமிழகத்தில் விரைவில் ஜனாதிபதி ஆட்சி வரும். பொதுத் தேர்தலும் நடைபெறும். அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகு தினமும் முக்கிய செய்தி வரும்.

தேமுதிக ஆளுங்கட்சி
மக்கள் பணியாற்றும் தேமுதிகவை ஒடுக்க நினைக்கிறார்கள். அது ஒருபோதும் முடியாது. விரைவில் தேமுதிக மாநிலத்தை ஆளும்கட்சியாக மாறும். அப்போது நாங்கள் போலீசாரை பழிவாங்க மாட்டோம். மக்கள் நலனில்தான் அக்கரைக் காட்டுவோம் என்று அதிரடி சரவெடியாக பேசி முடித்தார் பிரேமலதா.












Click it and Unblock the Notifications