ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பெரிய கட்சிகளின் கூட்டணியில்லை... நேரடி மோதலில் அதிமுக- திமுக !
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் பெரிய கட்சிகளின் கூட்டணியின்றி அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதிக் கொள்கின்றன. இதனால், இரண்டு கட்சிகளும் தங்களது தனிப் பலத்தைக் காட்ட மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் பதவியும், முதல்வர் பதவியும் பறி போனது.
இதனால், ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 13ம் தேதி ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் ஆனந்த், அதிமுக சார்பில் வளர்மதி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டு, வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுகவைப் பொருத்தவரை அண்மையில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் போட்டியிட்டது. நடிகர் சரத்குமார், செ.கு. தமிழரசன் உள்ளிட்டோர் ஆதரித்தனர்.
திமுக அணியில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், முஸ்லிம் முன்னேற்றக் கழகம், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது. பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக ஆகியவை கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இடதுசாரிகள் தனி அணியாகப் போட்டியிட்டனர்.
இந்த நிலையில், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் வேட்பாளரை பொது வேட்பாளராகக் கருதி ஆதரிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். ஆனால், அவரது வேண்டுகோளை புறந்தள்ளி, பாமக, மதிமுக ஆகியவை யாரையும் ஆதரிப்பதில்லை என்ற முடிவை அறிவித்துவிட்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகியவை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. முஸ்லிம் லீக் ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.
இதேபோல், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, புதிய கட்சியைத் தொடங்கியுள்ள ஜி.கே. வாசன், இத்தேர்தலில் தங்களது கட்சி போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டார். காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
பாஜக - தேமுதிக அணி போட்டியிடும் என அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், இன்னும் வேட்பாளர் குறித்த விபரம் வெளியிடப்படவில்லை. இடதுசாரிக் கட்சிகளின் மாநில மாநாடுகள் தனித்தனியே நடைபெறவுள்ளதால் அக்கட்சிகள் உறுதியான முடிவெடுக்க முடியாமல் உள்ளன.
ஸ்ரீரங்கத்தில் நிலவும் இத்தகைய அரசியல் சூழ்நிலையால், அங்கு அதிமுகவும், திமுகவும் பெரிய கட்சிகளின் ஆதரவின்றி இடைத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. எனவே, இரண்டு கட்சிகளும் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் மூலமாக தங்களது தனிப்பெரும் பலத்தை நிரூபிக்க கடுமையாகப் போராட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப் பட்டுள்ளன.