ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்.. மார்ச் 13ல் திமுக வேட்பாளர் நேர்காணல்!
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான பணிகளில் முதல் ஆளாக திமுக குதித்துள்ளது. மார்ச் 13ம் தேதி தனது கட்சி சார்பில் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை முடிவு செய்ய நேர்காணலுக்கு அது அழைப்பு விடுத்துள்ளது.
மார்ச் 13ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்தால் காலியாக உள்ள ஆர்.கே.நகருக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 16ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் திமுக தனது வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
மார்ச் 13ம் தேதி அது நேர்காணலுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நேர்காணலில் பங்கேற்கலாம் என கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். விண்ணப்பிக்க விரும்புவோர் வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக ரூ. 25,000 செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. விண்ணப்பிப்போர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மார்ச் 12ம் தேதி மாலை 6 மணிக்குள் கட்சித் தலைமையகத்தில் ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2016 பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் அதிமுகசார்பில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் சிம்லா முத்துச் சோழன் 2வது இடத்தையே பிடித்தார்.
2016 பொதுத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம்:
ஜெயலலிதா (அதிமுக) - 97218
சிம்லா முத்துச்சோழன் (திமுக) - 57673
வாக்கு வித்தியாசம் - 39545