தென்காசி திமுகவில் கும்மாங்குத்து… கோஷ்டி மோதலில் பதறி ஓடிய ஐ.பெரியசாமி
தென்காசி: தென்காசியில் நடந்த தி.மு.க.,ஆலோசனை கூட்டத்தில் இரு கோஷ்டியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை தொடர்ந்து திண்டுக்கல் பெரியசாமி அங்கிருந்து கிளம்பிச்சென்றதால் பரபரப்பு அதிகரித்தது.
2016 சட்டசபைத்தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் இப்போதே மக்களை சந்திக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் இந்த முயற்சியில் திமுகவும் களமிறங்கியது. தி.மு.க.பொருளாளர் ஸ்டாலின், மக்கள் சந்திப்பு என்ற பெயரில் மாவட்டம் தோறும் மக்கள் பிரச்னைகளை நேரில் கேட்டறிகிறார். வரும் 22ம் தேதி நெல்லை மாவட்டத்தில் காலையில் துவங்கி இரவு வரையிலும் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்கிறார்.
பீடித்தொழிலாளர், கட்டட தொழிலாளர், தொழில்முனைவோர் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்து குறைகள் அறிகிறார்.
அவரை வரவேற்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஞாயிறன்று நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க.,சார்பில் தென்காசி, குத்துக்கல்வலசை தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில் மேலிட பார்வையாளராக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டார். நிகழ்ச்சியை தொகுத்து பேசிய சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் சார்பில் தென்காசி ராமையா பேசுவார் என்றார்.
அதற்கு கூட்டத்தில் இருந்தவர்கள், ஒன்றிய செயலாளர் சிவ பத்மநாபனும் பேச அனுமதிக்கவேண்டும் என்றனர். சிவ பத்மநாபன் பேசுகையில், நிகழ்ச்சிக்கு இன்னமும் சில தினங்களே உள்ள நிலையில் நான் எப்போது போன் செய்தாலும் மாவட்ட செயலாளர் துரைராஜ்க்கு பதில் அவரது டிரைவர்தான் பேசுகிறார். எந்த தகவலும் சொல்வதில்லை என குறைபட்டுக்கொண்டார்.
இந்நிலையில் வல்லம் பகுதியை சார்ந்த திவான் ஒலி என்பவரது கார் ஓட்டுனர் மாரி என்பவர் தனது செல்போனில் கூட நிகழ்வுகளை ஆர்வக்கோளாறு காரணமாக பதிவு செய்துக் கொண்டிருந்தார் அதனைப் பார்த்த திமுக பிரமுகர்கள் அவர் எதிர்க்கட்சி சேனலைச் செய்தியாளர் என நினைத்து அவரை தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு உருவானது.
இருதரப்பினருக்கும் இடையே மோதல் கைகலப்பு ஏற்பட்டது அடிதடி காயம் ஏற்பட்டும் அவர்கள் சிகிச்சைக்கும் செல்லவில்லை. போலீசிலும் புகார் தரவில்லை. இந்த மோதலை தொடர்ந்து திண்டுக்கல் பெரியசாமி அங்கிருந்து வேகமாகக் கிளம்பிச்சென்றார்.
நெல்லை மேற்கு மாவட்டத்தில் திமுகவினர் மத்தியில் தொடரும் கோஷ்டி பூசல் சட்டமன்றத் தேர்தலை பாதிக்கும் என்கின்றனர் திமுக மூத்த தலைவர்கள்