சசி பெருமாள் உயிரிழக்கவில்லை, அதிமுக ஆட்சியால் கொல்லப்பட்டுள்ளார்.. ஸ்டாலின் அதிரடி
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுகுடிப்பகங்கள் எண்ணிக்கையை குறைத்தது திமுக தான் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். காந்தியவாதி, சசிபெருமாள் உயிரிழக்கவில்லை ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டுள்ளார் என்றும் குற்றம் சாட்டிய அவர், மக்கள் பிரச்சனைக்கு போராடி இறந்தவருக்கு ஜெயலலிதா ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று புகார் கூறியுள்ளார்.
மதுவிலக்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், ஏற்கனவே திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தபடி இன்று மாநிலத்தின் அனைத்து முக்கிய தலைநகரங்களிலும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னை சோழிங்கநல்லூரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அறவழிப் போராட்டம் நடைபெற்றது. மறைந்த காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பின் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் துவங்கியது.
படிக்கவா? குடிக்கவா?
ஆர்பாட்டத்தில் திமுகவினர் ஏராளமானோர் அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியிருந்தனர். படிக்க வைப்பவள் அம்மாவா? குடிக்க வைப்பவள் அம்மாவா? என்று அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
மதுவிலக்கு
போராட்டத்தின் போது பேசிய ஸ்டாலின் மதுவிலக்கு போராட்டம் திமுகவிற்கு புதிது அல்ல என்றார். பெண்களுக்கு சொத்தில் சமஉரிமையை திமுக பெற்றுத் தந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என உறுதி தெரிவித்தார்.
மதுவிலக்கு கொள்கை
1971ல் சட்டசபையில் மதுவிலக்கு கொள்கை பற்றி திமுக தலைவர் கருணாநிதி பேசியுள்ளதாக குறிப்பிட்ட ஸ்டாலின், மதுவிலக்கு கொள்கை என்பது புனிதமானது என கூறினார்.
டாஸ்மாக் கடை
திமுக ஆட்சியில் மதுவிலக்கு கொள்கை முன்பே அமலுக்கு வந்துள்ளதாக கூறிய அவர், அதிமுக ஆட்சியில் தான் மீண்டும் மதுவிலக்கு கொள்கை விலக்கப்பட்டதாக கூறினார். இன்று தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடையை முதல்வர் ஜெயலலிதா திறந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
திமுக ஆட்சியில் குறைப்பு
டாஸ்மாக் விற்பனை நேரத்தை 12 மணி நேரமாக திமுக குறைத்ததாக கூறிய ஸ்டாலின், டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுகுடிப்பகங்கள் எண்ணிக்கையை குறைத்தது திமுக தான் என்றார்.
திமுகவிற்கு அருகதையில்லை
மது விலக்கு பற்றி பேச திமுகவிற்கு அருகதை இல்லை என நத்தம் விஸ்வநாதன் கூறிய கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த ஸ்டாலின், மது விலக்கு பற்றி பேச திமுகவிற்கு அருகதை இல்லை என்று சொல்ல நீ யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
சசிபெருமாள்
சசிபெருமாள் உயிரிழப்புக்கு அதிகாரிகளும், ஆட்சியாளர்களுமே காரணம், போராட்டத்தில் சசிபெருமாள் உயிரிழக்கவில்லை ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டுள்ளார் என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மக்கள் பிரச்சனைக்கு போராடி இறந்தவருக்கு ஜெயலலிதா ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தார்.