சஸ்பெண்ட்: திமுக என்னை அவமானப்படுத்தி விட்டது... கே.பி.ராமலிங்கம்
நாமக்கல்: தி.மு.கவில் இருந்து என்னை தற்காலிகமாக நீக்கி இருப்பதாக அறிவித்து இருப்பதை எனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதுகிறேன் என்று கே.பி.ராமலிங்கம் எம்.பி. கூறினார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம். இவர் 1980-84, 1984-89 என இரண்டு முறை அதிமுக எம்எல்ஏவாக இருந்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு 1990ல் திமுகவில் இணைந்த இவருக்கு, மாநில விவசாய அணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், 1996 முதல் மாநில விவசாய அணிச் செயலாளராக இருந்து வந்தார்.
இதற்கிடையே, 1996ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு திமுக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, 1998ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் திருச்செங்கோடு தொகுதியிலும், 2001 சட்டசபைத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியிலும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
2010 முதல் ராஜ்யசபா திமுக உறுப்பினராக இருந்து வருவதுடன், திமுக தென் மண்டல அமைப்புச் செயலராக இருந்த மு.க.அழகிரி ஆதரவாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கே.பி.ராமலிங்கம் உள்பட 33 பேரை திமுக அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இடைநீக்க உத்தரவு மூலம் திமுக தன்னை அவமானப் படுத்தி விட்டதாகத் தெரிவித்துள்ளார் கே.பி.ராமலிங்கம். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:
கட்சியின் வளர்ச்சியில் பங்கு...
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு தி.மு.க.வில் சேர்ந்த காலத்தில் இருந்து கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நான் கட்சிக்காக உழைத்து வருகிறேன்.
ஐக்கிய முன்னணியின் அடித்தளம்...
கடந்த 2004ம் ஆண்டு ஐக்கிய முன்னணி என்ற அமைப்பு உருவாக அடித்தளமாக இருந்து செயல்பட்டவன் நான்தான். தி.மு.க. விவசாய அணி தலைமையில் நடைபெற்ற போராட்டம் தான் இந்த அமைப்பு உருவாக காரணமாக இருந்தது.
விவசாயிகள் ஒருங்கிணைப்பு...
அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சி செய்தபோது, தி.மு.க. விவசாய சங்கம் சார்பில் அனைத்து விவசாய சங்க தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து அவர்களை ஒருங்கிணைத்தவன் நான்தான்.
புதிய கூட்டணிக்கான மாநாடு...
அப்போது பாஜக அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகித்தபோது காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் நல்லக்கண்ணு மற்றும் விவசாய சங்க தலைவர்களையும் கோவையில் 2003-ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி ஒரே மேடையில் அமரவைத்து மாநாடு நடத்தினேன். அந்த மாநாடு தான் புதிய அரசியல் கூட்டணி உருவாக வழிவகுத்தது.
அவமானம்...
அந்த கூட்டணி 40-க்கு 40 எம்.பி. தொகுதிகளை கைப்பற்றியது. இப்படி 40 தொகுதிகளிலும் வெற்றிபெற உறுதுணையாக இருந்தது நான்தான். அப்படியெல்லாம் உழைத்த என்னை தற்போது தற்காலிகமாக நீக்கி இருப்பதாக அறிவித்து இருப்பது எனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதுகிறேன்.
விளக்கம்
கட்சி தலைமையிடம் இருந்து எந்தவித நோட்டீசு வருகிறதோ? அந்த நோட்டீசில் என்னென்ன காரணங்கள் சொல்லப்பட்டு இருக்கிறதோ? அந்த காரணங்களுக்கு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இருந்து கட்சி தலைமைக்கு பதில் அளிப்பேன்.
புறக்கணிப்பு:
நான் கட்சியில் இருந்து பல வகையில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறேன். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு முன்பு, மறைவுக்கு பின்பு என்று இரண்டு காலக்கட்டங்களிலும் நான் கட்சி தலைமையால் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறேன். எந்தெந்த வகையில் நான் புறக்கணிக்கப்பட்டேன் என்பதை மிக விரைவில் சொல்வேன் என்றார்.