உருப்பட மாட்டாய் என சொல்வதில்லையா, அப்படித்தான் நான் சொன்னதும்... அழகிரி
மதுரை: சரியாக படிக்காத மாணவனை நீ உருப்பட மாட்டாய் என்று கூறுவதில்லையா. அப்படித்தான் நானும் திமுக தோற்று விடும் என்று அறிவுரை போல சொன்னேன். ஆனால் திமுக தோற்க வேண்டும் என்று நான் சொன்னது போல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு விட்டன என்று திடீரென தான் பேசிய பேச்சை மறுத்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக மதுரைக்கு வந்துள்ளார் அழகிரி.
இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவின் நலனுக்காகவே கட்சியை விமர்சித்தேன். அதற்காக என்னை நீக்கியுள்ளனர். இதனால் எனக்குப் பாதிப்பு ஏதும் இல்லை. எனக்கு திமுகவினர் ஆயிரக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். என்னுடைய பிறந்த நாள் விழாவுக்கு தொண்டர்கள் அதிகமாக வர விரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் அழகிரி.
திமுக தானாகவே தோற்று விடும் என்று சொல்லியிருந்தீர்களே என்ற கேள்விக்கு, சரியாக படிக்காத மாணவனை நீ உருப்பட மாட்டாய் என்று ஆசிரியர் சொல்வத்தைப்போல்ததான், அறிவுரையாக தி.மு.க தோற்றுவிடும் என்று சொன்னேன்.
எப்படி மாணவன் நன்றாக படிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆசிரியர் கூறுகிறாரோ, அதுபோலத்தான் தி.மு.க ஜெயிக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் கூறினேன். ஆனால் நீங்கள்தான் (ஊடகங்கள்) அதை சற்று மாற்றி போட்டுவிட்டீர்கள் என்று விளக்கினார் அழகிரி.
மேலும் அவர் கூறுகையில், மதுரையில் பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்கள். மாவட்ட நிர்வாகத்தை கலைத்து விட்டார்கள். இது எல்லாம் சரியல்ல. நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று தி.மு.க. தலைவரிடம் கேட்டேன்.
மதுரையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள கட்சியினர் வீடுகளில் மட்டும் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இதெல்லாம் நமக்கு இழப்புதானே என்று தலைவரிடம் கூறினேன். இதைநான் மேடை போட்டு பேசவில்லை. தலைவரிடம்தான் நேரில் பேசினேன். இதில் என்ன தவறு இருக்கிறது.?
திண்டுக்கல்லில் இருந்து முத்துப்பாண்டி என்ற தி.மு.க பிரமுகர் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் என்னை இன்று சந்தித்தனர். விமான நிலையத்திலும் ஏராளமானவர்கள் வந்து வரவேற்றனர். அவர்கள் எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது ஆதரவாளர்களை பார்க்க நான் எங்கேயும் செல்ல வேண்டியதில்லை. அவர்களே என்னை பார்க்க மதுரைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். 30ஆம் தேதி எனக்கு பிறந்தநாள் அதை உற்சாகமாக கொண்டாடுவார்கள். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பிறந்தநாள் முடிந்த பிறகு பார்க்கலாம் என்றார் அழகிரி.