கருணாநிதிக்கு பாரத ரத்னா!- நாடாளுமன்றத்தில் திமுக கோரிக்கை
சென்னை: திமுக தலைவர் மு கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி கோரிக்கை வைத்துள்ளார்.
திமுகவின் தர்மபுரி தொகுதி எம்.பி ஆர்.தாமரைசெல்வன், 377 விதியின் கீழ் இந்தக் கோரிக்கையை எழுப்பினார்.
இது குறித்து அவர் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான அறிக்கையில், "கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்பது உலகம் முழுவதும் இருக்கும் பத்து கோடி தமிழர்களின் கோரிக்கை.

டாக்டர் கலைஞர் என அன்புடன் அழைக்கப்படும் கருணாநிதி தம் 14 வயதில் பொதுமக்களுக்கு தொண்டு செய்ய அரசியலுக்கு வந்தவர்.
திராவிட இயக்கத்தின் வெற்றி வீரரான இவர், கீழ்மட்டத்தில் இருந்து அனைத்து தரப்பிலான மக்களுக்காகவும் சேவை செய்தவர். 1957 முதல் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர். தேர்தல்களில் ஒருமுறை கூட தோல்வி காணாதவர். தீவிர அரசியலுடன் தமிழ் இலக்கியத்திற்காகவும் பாடுபட்ட பெரும் தலைவர்.
கலைத் துறையில் அவர் சாதனை அளப்பரியது. தமிழ்ப் பட உலகின் 75 திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர். பாடலாசிரியர், கவிஞர். 91 வயதிலும் சிறந்து விளங்கும் அறிஞர், சிறந்த ராஜதந்திரி.
தேசிய ஒற்றுமை மற்றும் மதநல்லிணக்கத்திற்காக மாநில மற்றும் தேசிய அளவில் பாடுபட்ட அரசியல்வாதி. ஒரு ஸ்டேட்ஸ்மென் அனைத்துக் கட்சியினரும் போற்றும் தலைவர். இந்த வயதில் வேறு எவரும் இவர் அளவுக்கு நாட்டிற்காக பாடுபட்டதில்லை என நம்புகிறேன்.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் டாக்டர். கலைஞர் முத்துவேல் கருணாநிதிக்கு பாரத ரத்னா பட்டம் அளிப்பதில் என்னுடன் இணைந்து அரசிடம் வலியுறுத்துவார்கள் என நம்புகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications