இந்து எதிர்ப்பு இயக்கம் அல்ல திமுக: சொல்கிறார் ஸ்டாலின்
தஞ்சாவூர்: அண்ணாவின் வழிவந்த நாங்கள் திருமூலரின் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற போதனையைப் பின்பற்றுகிறோம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இந்து எதிர்ப்புக் கட்சி என்ற தொணியில் திட்டமிட்ட பிரச்சாரம் சமீப காலமாக பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம் மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின், கடந்த இரு தினங்களாக தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மக்களை சந்தித்து குறை கேட்டார்.
தஞ்சை மேல வீதி காமாட்சி அம்மன் கோவிலில் இந்து மத குருக்கள், அர்ச்சகர்களுடன் கலந்துரையாடினார் ஸ்டாலின், பின்னர் மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் ஆயர் மற்றும் தேவாலய பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏற்கனவே திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலுக்கு ஸ்டாலின் போனது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தேர்தலுக்காக ஸ்டாலின் நாடகம் போடுவதாக புகார் எழுந்தது.

இந்து எதிர்ப்பு இயக்கமா?
திமுக இந்து எதிர்ப்பு இயக்கம் என்று எழுந்துவரும் குற்றச்சாட்டுகளை மு.க.ஸ்டாலின் மறுத்துள்ளார்., "திமுக-வின் 90% தொண்டர்கள் இந்துக்களே. அவர்களது குடும்பத்தினர் கடவுள் மீதும் மதத்தின் மீதும் நம்பிக்கை கொண்டே இருக்கிறார்கள்.

அனைவருக்கும் மதிப்பு
வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டே நான் கோயில்களுக்குச் சென்று பூசாரிகளை சந்திக்கிறேன் என்பது தேவையற்ற குற்றச்சாட்டு. சமூகத்தின் அனைத்து தரப்பினரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பவன் நான். இதற்கு முந்தைய காலக்கட்டங்களில்கூட நான் கோவில்களுக்குச் சென்றிருக்கிறேன், பூரண கும்ப மரியாதையை ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.

மதத்தின் மீது நம்பிக்கை
என் மனைவி தமிழகம் முழுவதும் இருக்கும் பல்வேறு கோயில்களுக்கும் சென்று வருகிறார். அவரிடம் ஒருமுறைகூட இதுதொடர்பாக நான் கேள்வி எழுப்பியதில்லை. ஏனெனில் மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் யாருடைய பாதையிலும் நாங்கள் குறுக்கிடுவதில்லை.

திமுகவில் இந்துக்கள்
திமுக இந்து எதிர்ப்புக் கட்சி என்ற தொணியில் திட்டமிட்ட பிரச்சாரம் சமீப காலமாக பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், எனது குடும்பத்தினரும் சரி கட்சித் தொண்டர்களின் குடும்பத்தினரும் சரி இறை நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

கோவிலுக்கு போனது ஏன்?
'நமக்கு நாமே' முதற்கட்ட பயணத்தின்போது நான் திருக்கோஷ்டியூர் கோவிலுக்குச் சென்று வந்தேன். ஏனெனில் அங்குதான் புனிதர் ராமானுஜர் அவரது ஆசிரியரின் அறிவுரையை புறக்கணித்து கோயில் உச்சியில் ஏறி அவருக்கு அளிக்கப்பட்ட உபதேசத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். அத்தகைய சிறப்பு வாய்ந்த இடத்தைப் பார்க்கவே அங்கு சென்றேன்.

திருமூலரின் போதனை
அண்ணாவின் வழிவந்த நாங்கள் திருமூலரின் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற போதனையைப் பின்பற்றுகிறோம். எங்கள் தலைவர் கருணாநிதி ராமானுஜம் தொலைக்காட்சித் தொடருக்கு வசனம் இயற்றியுள்ளார். ஏனெனில் அவரே கோவில்களுக்குள் தலித் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும் பிரவேசம் செய்ய வழிவகுத்தார்.












Click it and Unblock the Notifications