"உடன்பிறப்பே" கடிதம் இல்லாத முரசொலி...ஏங்கும் திமுக தொண்டர்கள்!!
கருணாநிதியின் உடன்பிறப்பே கடிதம் இல்லாமல் முரசொலி நாளிதழ் தொண்டர்களை உற்சாகம் இழக்கச் செய்துள்ளது. கருணாநிதியின் கடிதத்துக்காக திமுக தொண்டர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
சென்னை: திமுகவின் குரலான முரசொலியில் அக்கட்சி தலைவர் கருணாநிதியின் சிறப்பு வாய்ந்த உடன்பிறப்பே கடிதம் தொடர்ந்து வெளிவராமல் இருப்பது அக்கட்சி தொண்டர்களை ஏங்க வைத்துள்ளது.
முரசொலி நாளேடு 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இதில் திமுகவின் முக்கிய அறிவிப்புகள், கருணாநிதியின் உடன் பிறப்பே கடிதம் ஆகியவை இடம் பெறும். வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு தொடர்களையும் கருணாநிதி இதில்தான் எழுதியிருந்தார்.
அண்ணாவின் கடிதம்
திமுக நிறுவனர் அறிஞர் அண்ணா தனது தம்பிகளுக்கு கடிதம் எழுதினார். அது உலகப் புகழ் பெற்றவை. இவை திமுகவில் தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியவை.
உடன்பிறப்பே கடிதம்
அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் திமுக தலைவரான கருணாநிதி முரசொலியில் உடன்பிறப்பே... என்று தொடங்கி கடிதம் எழுவது பிரபலமானது. ஆளுங்கட்சியாக இருந்தால் ஆட்சியின் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி எழுதுவார் கருணாநிதி.
தொண்டர்களுக்கு உற்சாகம்
எதிர்கட்சியாக இருந்தால், ஆளும்கட்சியை விமர்சித்து கடிதத்தில் எழுதுவார் கருணாநிதி. அவரது கடித நடை திமுக தொண்டர்களை கட்டிப் போட்டு வைத்ததுதனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. உடன்பிறப்பே கடிதம் படிக்க கண் விழிப்பவர்களும் உண்டு. அடேயப்பா!எத்தனை புள்ளி விவரங்களை இந்த வயதிலும் அடுக்குகிறாரே என சிலாகிப்பவர்கள் ஏராளம்.
உடல்நலக்குறைவு
ஓய்வறியா சூரியனாய் உழைத்து வந்த கருணாநிதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒவ்வாமையால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளார். எனினும் இன்னமும் பூரண குணமடையவில்லை.
கடிதம் இல்லை.
இதனால் கருணாநிதியின் உடன்பிறப்பே கடிதம் தற்போது முரசொலியில் இடம்பெறவில்லை. எப்போது கருணாநிதியின் கடிதம் வருமோ என ஏக்கத்துடன் திமுக தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.
ஸ்டாலின் கடிதம்
இதனிடையே திமுகவை வழிநடத்த அக்கட்சியின் செயல்தலைவராக கடந்த வாரம் நியமிக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து அவரும் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதி வருகிறார். ஸ்டாலின் எழுதும் 'கலைஞரின் உடன்பிறப்புகளே' கடிதம் தொடருமா? அது எந்த அளவுக்கு தொண்டர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போக போக தெரியும்.