ஜன.9ல் திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவி தேர்தல்: அன்பழகன் அறிவிப்பு
சென்னை: திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுக்குழு கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் எனவும் அன்றைய தினம் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொறுப்புகளுக்காக வேட்புமனுக்கள் 7-1-2015 (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளப்படும் எனவும் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 14வது பொதுத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகுதியுள்ள ஒன்றிய - நகர - நகரியபகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள் அடங்கிய புதிய பொதுக்குழுக் கூட்டம் 9.1.2015 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை, கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
அதுபோது தி.மு.கழகத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும்.
மேற்கண்ட பொறுப்புகளுக்காக வேட்புமனுக்கள் 7-1-2015 (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளப்படும்.
இப்பொறுப்புகளுக்குப் போட்டியிடுவோர் வேட்புமனுக் கட்டணமாக ரூ.25,000/- (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) அளித்து இரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக்குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர்களைப் பொதுக்குழு உறுப்பினர்கள் (தலைமைச் செயற்குழு உறுப்பினர் உட்பட) ஐவர் முன்மொழிய, ஐவர் வழி மொழிய வேண்டும். அனைத்து நடைமுறைகளிலும் கழகத் தேர்தல் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அன்பழகன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
திமுக தலைவராக நீண்டகால தலைவராக கருணாநிதி இருந்து வருகிறார். அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் அன்பழகனும் நீண்டகாலமாக பணியாற்றிவருகிறார். திமுக தலைவர் கருணாநிதி 11-வது முறையாக மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப் படவுள்ளார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு உயர் பதவி கொடுக்கும் வகையில் கட்சியில் புதிய பொறுப்பை ஏற்படுத்த கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது. பொதுச் செயலாளர் பதவியில் அன்பழகன் இருப்பதால், ஸ்டாலினுக்காக செயல் தலைவர், துணைத் தலைவர் போன்ற பதவி ஒன்றை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை நடந்துவருகிறது.
ஒருவேளை ஸ்டாலினுக்கு புதிய பதவி வழங்கப்படும் சூழலில், அவர் ஏற்கெனவே வகித்துவரும் இளைஞர் அணிச் செயலாளர் (பொறுப்பு), பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு அவரது ஆதரவாளர்களை நியமிக்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.