ஜெ. பலவீனத்தை வைத்து தன்னைப் பலப்படுத்திக் கொள்ள திமுக திட்டம்.. !
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மூலம் மிகவும் பலவீனமடைந்துள்ள நிலையில் இதைப் பயன்படுத்தி தமிழகத்தில் பெரிய கூட்டணியை அமைத்து வரும் சட்டசபைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் திட்டங்களை திமுக வகுக்க ஆரம்பித்துள்ளது.
உட்கட்சிப் பூசலால் திமுகவில் பல பிரச்சினைகள் வெளிப்படையாகவும், ரகசியமாகவும் நடந்து வரும் நிலையில், அதைச் சமாளிக்க ஜெயலலிதா வழக்கை வைத்து பிரிந்து கிடக்கும் கட்சிகளை கூட்டுச் சேர்த்து வரும் தேர்தலைச் சந்திப்பது என்ற முடிவில் திமுக இருப்பதாக தெரிகிறது.
முதலில் சட்டசபைத் தேர்தலிலும், பின்னர் லோக்சபா தேர்தலிலும், ஜெயலலிதாவால் மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்கும் நிலைக்கு ஆளான திமுக தற்போது அதே ஜெயலலிதாவை வைத்து கரை ஏறிக் கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காகவே திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை திமுக கூட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
8ம் தேதி திமுக மா.செக்கள் கூட்டம்
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நாளை மறு நாள் அதாவது ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு மறு நாள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது.
திமுகவுக்கு எதிராக அதிமுக தாக்குதல்
ஜெயலலிதா கைது செய்யப்பட்ட பின்னர் தமிழகம் முழுவதும் திமுகவினர் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். பல இடங்களில் அலுவலகங்கள், வீடுகள், வாகனங்கள் தாக்கப்பட்டன.
புள்ளி விவரத்துடன் வாருங்கள்
இந்த தாக்குதல், இதனால் ஏற்பட்ட சேதம் குறித்த புள்ளிவிவரத்துடன் கூட்டத்துக்கு வருமாறு திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளதாம்.
குடியரசுத் தலைவரை அணுக முடிவு
இந்த புள்ளி வி்வரங்களுடன், தமிழகத்தில் அதிமுகவினர் நடத்தி வரும் போராட்டங்கள், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உள்ளிட்டவற்றையும் சேர்த்து குடியரசுத் தலைவரிடம் நேரில் சென்று மனு கொடுக்கவும் திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாம்.
மீண்டும் ஒரு மெகா கூட்டணி
இதை விட முக்கியமாக ஜெயலலிதா பலவீனப்பட்டுள்ள நிலையில் இதை சாக்காக வைத்து தனது நிலையை பலப்படுத்திக் கொள்ளவும் திமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக மீண்டும் ஒரு மெகா கூட்டணியை அமைக்க அது திட்டமிட்டுள்ளதாம்.
மீண்டும் மீண்டும் அதே கட்சிகள்!
ஏற்கனவே தன்னுடன் பலமுறை கூட்டணி அமைத்து பலமுறை பிரிந்து போனவர்களான மதிமுக, பாமக ஆகிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர திமுக திட்டமிட்டுள்ளதாம். சமீபத்திய வைகோவின் பேச்சுக்கள், டாக்டர் ராமதாஸுடனான சந்திப்பு ஆகியவை இதற்கான முகாந்திரங்கள் என்கிறார்கள்.
முடிந்தால் தேமுதிகவையும்...!
அதேபோல முடிந்தால் தேமுதிகவையும் கூட்டணிக்குள் கொண்டு வர திமுக முடிவு செய்துள்ளதாம். இதுகுறித்தும் மாவட்டச் செயலாளர்களின் கருத்து கோரப்படவுள்ளதாம்.