வெள்ளத்தால் உயிரிழந்த குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிடுக: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: மழை, வெள்ளத்தால் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
கடந்த சில தினங்களில் பெய்த கனமழை மற்றும் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முப்பதிற்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்திருக்கிறார்கள். மரணம் அடைந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஏதோ பருவம் தவறி பெய்த மழை அல்ல. இந்த பருவத்தில் மழை பெய்யும் என்று தெரிந்திருந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கு எவ்வித சாக்கும் போக்கும் கூறி அதிமுக அரசு தன் கடமையிலிருந்து தப்பிக்க முடியாது.
இன்றைக்கு மழையால் தமிழகத்தின் உட்கட்டமைப்பும், அத்தியாவசியச் சேவைகளும் நிலை குலைந்து நிற்கின்றன. சென்னையிலும் மற்ற பகுதிகளிலும் சமீபத்தில் போடப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக மாறி விட்டன. மெட்ரோ ரெயில் போன்ற முக்கிய திட்டம் முடங்கி நிற்கிறது.
மாநகரத்தில் போக்குவரத்து நெருக்கடியோ அதை விட மோசமாக இருக்கிறது. விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரமான விவசாயத்தை பறிகொடுத்து நிற்கிறார்கள். ஒட்டு மொத்தமாக மக்களின் சகஜ வாழ்க்கை ஸ்தம்பித்து நிற்கிறது. மழையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்குச் சென்று வெள்ளச் சேதப் பகுதிகளை இன்று பார்வையிட்டேன்.
தங்கள் துயரங்களை மக்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். வடகிழக்கு பருவ மழை வரும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் முன்கூட்டியே எச்சரித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத அதிமுக அரசின் மீது மக்கள் ஆத்திரமாக இருக்கிறார்கள். கடலூர் மாவட்டத்தில் பல கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன.
மின் இணைப்பு துண்டிகப்பட்டுள்ள நிலையில் இருளில் கிடக்கின்றன. இன்னும் பல கிராம மக்கள் தங்கள் மாவட்டத்தின் மற்ற பகுதிகளுக்குப் போக முடியாமல் சாலைகள் துண்டிக்கப்பட்டு தவிக்கிறார்கள். தங்கள் பயிரை இழந்து பெரும் இழப்புகளை சந்தித்துள் விவசாயிகள் தங்கள் வாழ்வில் இடி விழுந்தது போன்ற அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார்கள். எல்லாவற்றையும் விட, அடிக்கடி வரும் இந்த வெள்ள சேதங்களை தடுக்க ஒரு நிரந்தர தீர்வை காண முடியாத அதிமுக அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பதைக் காண முடிந்தது.
அதிமுக அரசோ, இதுவரை "வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக" 600 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக வழக்கம் போல் பகட்டு அறிவிப்பை சட்டமன்றத்திலேயே அறிவித்துள்ளது. ஆனால் அந்த பணிகள் எங்கே நடைபெற்றன? அதன் பிறகும் ஏன் இவ்வளவு வெள்ள சேதங்கள் ஏற்பட்டது? ஆகவே, வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக செலவு செய்த 600 கோடி ரூபாய் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று அதிமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் மழை மற்றும் வெள்ளச் சேதத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எந்த வித சுகாதாரச் சீர்கேடும் ஏற்படாத வகையில் பாதுகாக்கத் தேவையான மருத்துவக் குழுக்களையும், உபரகணங்கள் மற்றும் மருந்து மாத்திரைகளையும் அப்பகுதிகளுக்கு அதிக அளவில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாயும், தங்கள் பயிரை இழந்த விவசாயிகளுக்கு போதிய நஷ்ட ஈடும் உடனடியாக வழங்க வேண்டும் என்று அதிமுக அரசை கேட்டுக் கொள்ளும் அதே நேரத்தில், இவ்வளவு மோசமான வெள்ள சேதங்கள் ஏற்பட விட்டு அமைதி காத்த அதிமுக அரசின் பொறுப்பற்ற போக்கிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே மக்களிடம் இருந்து விலகி மாட மாளிகையில் அமர்ந்து கொண்டிருக்காமல், முதலமைச்சர் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டு வெள்ள சேதங்களைப் பார்வையிட வேண்டும் என்றும், கொடநாட்டிற்கு சென்று ஓய்வு எடுப்பதற்குப் பதில் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, அரசு நிர்வாகத்தை செம்மைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முதலமைச்சர் ஜெயலலிதா எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் அதில் பதிவு செய்துள்ளார்.