ராகுலின் திடீர் சென்னை விசிட்.. ஷாக்கில் தமிழக காங். ... செம அப்செட்டில் திமுக!
சென்னை: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் திடீர் சென்னை பயணம் தமிழக காங்கிரஸ் தலைவர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுகவை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நீண்டகாலம் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுறுத்தல்.
முதல்வர் ஜெயலலிதாவை இதுவரை நேரில் சென்று யாரும் நலம் விசாரிக்கவில்லை. ஆனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தருகின்றனர். அங்கு அதிமுக தலைவர்கள், மருத்துவர்கள் குழுவை சந்தித்து ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர்.
யாருக்கும் தெரியாது..
இந்த நிலையில் சென்னைக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி திடீரென வருகை தந்தார். அவரது வருகை குறித்த தகவல் நேற்று காலை 10 மணிவரை காங்கிரஸ் கட்சியினர் யாருக்குமே தெரியாது. சென்னையில் காலை 11.15க்கு ராகுல் வந்திறங்கிய பின்னரே தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கே அவரது பயணம் குறித்த தகவல் தெரியும்.
ஷாக்கில் தமிழக காங்.
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்குக்கும் கூட ராகுலின் பயணம் தெரியாதாம்... இது தமிழக காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்தது.
கருணாநிதியை சந்திக்காத ராகுல்
இதைவிட திமுகவினருக்குதான் ராகுலின் பயணம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.. இதுரை தமிழகத்துக்கு பல முறை வருகை தந்த ராகுல் காந்தி, கூட்டணி கட்சித் தலைவரான கருணாநிதியை ஒருமுறை கூட நேரில் சந்தித்து பேசியதே இல்லை. இதை கருணாநிதியே சுட்டிக் காட்டியும் உள்ளார்.
ஸ்டாலின் தரப்பு அப்செட்
தற்போதும் கருணாநிதியை ராகுல் காந்தி சந்திக்கவில்லை. ஏற்கனவே காங்கிரஸை எப்படியாவது கூட்டணியில் இருந்து கழற்றிவிட வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறது திமுகவின் முக ஸ்டாலின் தரப்பு. ஆனால் கனிமொழி தரப்போ, காங்கிரஸ் தயவு அவசியம் என கருதிக் கொண்டிருக்கிறது. இதைத்தான் கருணாநிதியும் விரும்புகிறார். இதனால் ராகுல் காந்தியின் வருகையை வைத்து காங்கிரஸுடனான உறவை முறிப்பது குறித்து தீவிர காய்நகர்த்தல்களை ஸ்டாலின் தரப்பு மேற்கொண்டிருப்பதாக கூறுகின்றன அறிவாலய வட்டாரங்கள்.