கருணாநிதி பிறந்தநாள்.. கேப்டனுக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தும்.. கடுப்பில் தி.மு.க.!!
சென்னை: கருணாநிதியின் பிறந்தநாளுக்கு எப்படியும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வந்துவிடுவார் என்று காத்திருந்த காத்திருப்பு வீணாய் போனதில் தி.மு.க. தலைவர்கள் மிகவும் அதிருப்தி அடைந்து போயுள்ளதாக கூறப்படுகிறது.
கருணாநிதியின் 92வது பிறந்த நாளையொட்டி பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரிலும் தொலைபேசியிலும் வாழ்த்துத் தெரிவித்தனர். கலைஞர் டி.வியிலும் பல்வேறு கட்சித் தலைவர்களின் வாழ்த்துகள் திரும்ப திரும்ப ஒளிபரப்பானது.
திரும்ப ... திரும்ப வைகோ
ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவின் வாழ்த்தை மீண்டும் மீண்டும் கலைஞர் டிவி ஒளிபரப்பி மகிழ்ந்ததுடன் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெறும் என்பதையும் சூசகமாக உணர்த்திக் கொண்டே இருந்தது. இதேபோல்தான் எப்படியும் விஜயகாந்தும் வந்துவிடுவார்.. கூட்டணிக்கான பலமான அடித்தளம் அமைந்துவிடும் என்றெல்லாம் தி.மு.க. தலைமையும் மூத்த நிர்வாகிகளும் எதிர்பார்த்திருந்தனராம்..
அன்று வந்தவர்தானே..
ஏனெனில் தமிழக நலன் பிரச்சனைகளுக்காக கருணாநிதியின் வீடு தேடி வந்து ஆதரவு கேட்டவர் விஜயகாந்த்.. அந்த நட்பின் நீட்சியாக நிச்சயம் வந்தே தீருவார் என வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தனராம் தி.மு.க.வினர்..
இன்னமும் அந்த கூட்டணி
ஆனால் தம்மை சந்திப்பவர்களிடம் எல்லாம் இன்னமும் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியிலேயே நீடிக்கிறோம் என்று விஜயகாந்த் கூறிவருவதும் இதை ஆமோதிப்பது போல பாரதிய ஜனதா தலைவர்களும் பேட்டி அளிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இதனால் தி.மு.க. தலைவர்களுக்கு சற்று ஊசலாட்டமும் இருந்ததாம்..
வராத கேப்டன்.. கடுப்பில் திமுக
இருந்தாலும் தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் நேரம் என்பதால் நிச்சயம் தி.மு.க. அணிக்கு வந்துவிடுவார்..இதற்காக கருணாநிதி பிறந்த நாளன்று நேரிலோ தொலைபேசியிலோ வாழ்த்து தெரிவிப்பார் என மிகவும் எதிர்பார்த்திருந்தது தி.மு.க. தலைமை..
"மாலை நேரமாகியும்" கேப்டனிடம் இருந்து எந்த ஒரு சிக்னலும் வராமல் போக "இனியும்" அவர் வரமாட்டார் என கடுப்பான முடிவில் தங்களது கனவைக் கலைத்துக் கொண்டனராம் தி.மு.க. நிர்வாகிகள்.. இதே நிலைமை நீடித்தால் அடுத்து என்ன செய்யலாம்? எப்படி கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்தும் தி.மு.க. தீவிரமாக ஆலோசனைகளை நடத்துகிறதாம்.