ஸ்ரீரங்கத்தில் எங்களுக்கு 60,000 ஓட்டு உள்ளது... டாக்டர் கிருஷ்ணசாமி
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதியில் எங்களது கட்சிக்கு 60,000 வாக்குகள் உள்ளன. திமுக நிச்சயம் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் வெற்றி பெறும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாக விளங்கக் கூடியவைகளில் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்கள் எந்த அளவிற்கு நேர்மையாகவும், வெளிப்படையாக நடைபெறுகிறதோ அதை பொறுத்தே ஒரு நாட்டில் வலுவடையக்கூடிய தன்மையை நிர்ணயிக்கும். ஆனால் அண்மைக்காலமாக தமிழகத்தில் நடைபெற்றக்கூடிய பொதுதேர்தல்களோ அல்லது இடைத்தேர்தல்களோ ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக ஆக்க கூடியதாக இருக்கின்றன. அதற்கு உதாரணமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகள் வாங்கப்பட்ட சுழ்நிலை உருவாக்கப்பட்டது. இடைத்தேர்தலை பொறுத்தமட்டில் ஜனநாயகத்தையே தாழ்த்த கூடிய வகையில் முற்றிலும் வாக்காளர்களை விலைபேசக்கூடிய நிலை உள்ளது.
இப்படிப்பட்ட கூழ்நிலையில் தமிழகத்தில் சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்று தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த பிறகு நடக்க கூடிய இடைத்தேர்தல் என்பதால் ஜனநாயக விதிமுறைகளுக்கு மாறாக முன்னுதாரணமாக நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனினும் எவ்வளவு மோசமான சூழ்நிலைகள் உருவானாலும் கூட ஜனநாயகத்தின் கடமையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் அதே போல சமூக இயக்கங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உண்டு.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரையில் புதிய தமிழகம் கட்சிக்கு 180 கிராமங்களில் கிளைகளும், 60,000க்கும் மேற்பட்ட வாக்குகள் உண்டு. அந்த அடிப்படையில் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்ட போது அவருக்காக நானே பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். புதிய தமிழகம் கட்சி போட்டியிடவில்லை.
திமுக தலைவர் கலைஞர் அவர்கள் திமுக வேட்பாளாரை பொதுவேட்பாளராக ஏற்றுக்கொண்டு ஆதரவளிக்க வேண்டும் என்றும், திமுக பொருளாளர் ஸ்டாலின் என்னிடம் தொலைபேசியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டதற்கு இனங்க திமுக வேட்பாளர் ஆனந்த் அவர்களுக்கு புதிய தமிழகம் ஆதரவளிக்கிறது. அவருடைய பெற்றிக்கு புதிய தமிழகம் பொறுப்பாளர்கள் முனைப்புடன் செயல்படுவார்கள். சூழ்நிலையைப் பொறுத்து ஆனந்த் அவர்களுக்கு பிரச்சாரம் செய்வேன்.
தமிழகத்தை பொறுத்தவரையில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. தமிழகத்தில் ஒரு ஆட்சி இருக்கிறதா? இல்லையா என்கிற மிகப்பெரிய கேள்வி எழுந்துக் கொண்டே இருக்கிறது. சட்டத்திற்கு புறமான ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆளுங்கட்சியை எதிர்த்து போட்டியிடும் பிரதான எதிர்கட்சியான திமுகவின் வேட்பாளரை ஆதரிக்கிறோம். ஜனநாயகத்தில் போர் என்று வந்துவிட்டால் கீழே படுத்துக்கொள்ள முடியாது. எதிர்த்து சண்டையிட வேண்டும். தேர்தலை சந்திக்காதவர்கள் எப்படி அரசியல்கட்சி நடத்த முடியும் என்றார் அவர்.