நாற்பதையும் வெல்வோம்... நாளைய பிரதமரை தீர்மானிப்போம்: திருச்சி மாநாட்டில் திமுக நிர்வாகிகள் பேச்சு
திருச்சி: திருச்சியில் இன்று நடைபெற்ற மாநில மாநாட்டின் முதல் நாளில் லோக்சபா தேர்தலில் நாற்பதையும் வெல்வோம்.. நாளைய பிரதமரை தீர்மானிப்போம் என்று திமுக நிர்வாகிகள் சூளுரைத்தனர்.
திருச்சியில் திமுகவின் 2 நாள் மாநில மாநாடு இன்று காலை தொடங்கியது. மாநாட்டின் வரவேற்பு குழுத் தலைவரான முன்னாள் அமைச்சர் நேரு பேசியதாவது:
இந்த மாநாட்டோடு 10வது மாநாட்டை நடத்தியிருக்கிறார் கருணாநிதி. திருச்சியில் 5 மாநாடுகள் நடத்த அவர் எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். எனக்கு மட்டும் மொத்தம் 3 மாநாட்டை நடத்தும் வாய்ப்பை கொடுத்துள்ளார்.
கடந்த 2 மாநாட்டை நடத்துவதற்காக உழைத்த எனது தம்பி ராமஜெயத்தின் நினைவாக அவரது பெயரில் கொடி மேடை அமைக்க உத்தரவிட்ட கருணாநிதிக்கு, நானும் எனது குடும்பமும் எப்போதும் நன்றி கடன் பட்டிருக்கிறோம்.
இம் மாநாடு, நாளைய பிரதமரை அடையாளம் காட்டும் மாநாடாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நீங்கள் நம்முடைய பொதுக்குழு கூட்டத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்தீர்கள்.. அன்றே திமுக தலைநிமிர்ந்துவிட்டது என்பது முடிவாகிவிட்டது.

இவ்வாறு நேரு பேசினார்.
இந்தியாவே பிரமிக்கிறது..
இம்மாநாட்டில் ஆற்காடு வீராசாமி பேசியதாவது:
திமுகவின் முதலாவது மாநில மாநாடு சென்னையிலே அறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றது. இரண்டாவது மாநில மாநாடு நாவலர் தலைமையிலே திருச்சியிலே நடை பெற்றது. மூன்றாவது மாநில மாநாடு மதுரையிலே அண்ணா தலைமையில் நடைபெற்றது.
அப்போது அண்ணா சொன்னார், நாட்டு மக்கள் வாக்களிப்பது பிறகு இருக்கட்டும். இந்த தேர்தலிலே போட்டியிலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வதற்கு கூடியிருக்கும் கழக தோழர்கள் இங்கே வைக்கப்பட்டிருக்கும் பெட்டியிலே தங்களது விருப்பத்தை தெரிவியுங்கள். அப்படி கருத்து தெரிவித்தவர்கள் அதிகமாக இருந்த காரணத்தால், திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலிலே போட்டியிடும் என்று அறிவித்தார்.
ஐந்தாவது மாநில மாநாட்டிலே, அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம், இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம், மாநிலத்தில் சுயாட்சி மத்தியிலே கூட்டாட்சி என்று கருணாநிதி முழங்கினார். அந்த முழக்கம்தான் தமிழ் நாடெங்கும் இதயகீதமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

7வது மாநில மாநாடு கோவையிலே கண்ணப்பன் வரவேற்பு குழு தலைவராக இருக்க, கருணாநிதி தலைமை தாங்கி நடத்தினார். திருச்சியிலே 8வது 9வது மற்றும் தற்போது இந்த 10வது மாநில மாநாட்டிற்கும் தலைமை ஏற்றிருக்கிறார் கருணாநிதி.
10 மாநாட்டில் 3 மாநாட்டிற்கு அண்ணா தலைமைதாங்கியிருக்கிறார். ஒரு மாநாட்டிற்கு நாவலர் தலைமை தாங்கியிருக்கிறார். ஆறு மாநாட்டிற்கு கருணாநிதிதான் தலைமையேற்றிருக்கிறார், இந்த 10வது மாநில மாநாடு இந்தியாவிலே இருக்கின்ற அனைவரும் பிரமிக்கும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு ஆற்காடு வீராசாமி பேசினார்.
40 தொகுதிகளையும் வெல்வோம்
இந்த மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் மாவட்ட திமுக செயலருமான ஐ.பெரியசாமி பேசியதாவது:
திருச்சி மாநாடு மக்கள் கூடும் கூட்டத்தின் அளவு 10 லட்சம் என கூறப்பட்டது.ஆனால் இன்று மட்டும் 10 லட்சம் தொண்டர்கள் மேல் இருக்கும். நான் திண்டுக்கல் இருந்து திருச்சி சாலை வரும் போது இன்றே 1500 மேற்பட்ட வாகனங்கள் வந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்தில் தலா 5000 க்கு மேற்பட்டவர்கள் வருவார்கள். இந்த மாநாடு நாளைய வரலாற்றில் சிறந்த மாநாடு ஆக இருக்கும்.
திமுக இயக்கத்தை சிறப்பாக தேர்தலை எதிர்கொள்ள இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியினர் உள்ளனர். இதை விட பெரிய மாநாடு நடத்த வேண்டும் என கருணாநிதியின் தம்பிகளுக்கு ஆசையாக உள்ளது.
ஸ்டாலின் வழியில் 40 தொகுதிகளையும் வெல்வது உறுதி என்பதை காட்டுவதே இந்த மாநில மாநாடு.
இவ்வாறு ஐ.பெரியசாமி பேசினார்.












Click it and Unblock the Notifications