கடமையை செய்யுங்கள் இல்லையெனில் கோட்டையை விட்டு வெளியேறுங்கள்: ஸ்டாலின்
சென்னை: மக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் நிலைநாட்ட அ.தி.மு.க. அரசு தன் கடமையை செய்ய வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் தமிழகம் இந்த ஆட்சியில் இழந்துவிட்ட பெருமைகளை மீட்க வழிவிட்டு கோட்டையில் இருந்து வெளியேற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு கொடுங்குற்றங்களின் தலைநகரமாகிவிட்டது. தேசியகுற்ற ஆவண காப்பகத்தின் 2014-ம் ஆண்டு அறிக்கையின்படி 173 மூத்த குடிமகன்கள் மாநிலத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் மூத்த குடிமக்கள் கொலையில் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலம் என ரத்தத்தால் பதிவாகிவிட்டது. கடந்த ஒரு வருடத்தில் 2121 கொலை முயற்சி தாக்குதல் மூத்த குடிமகன்களுக்கு எதிராக நடைபெற்று அதிலும் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறிவிட்ட கொடுமை வடுவாக காட்சியளிக்கிறது.
கொலைகள்
1805 கொலைகளும், 2922 கொலை முயற்சிகளும் நிகழ்ந்துள்ளதால் தென்மாநிலங்கள் அளவிலும் தமிழகம் முதல் மாநிலமாக மாறி, மாநிலத்தின் பெருமை குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 72 பேர் கொலை செய்யப்பட்டு அதிலும் தமிழகம் நாட்டிலேயே தாழ்த்தப்பட்ட மக்கள் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக மாறிய துயரம் நடந்துள்ளது.
குற்றவாளிகள்
ஏற்கனவே குற்றம் புரிந்து தண்டனை பெற்ற குற்றவாளிகளே மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடும் அவலம் தமிழ்நாட்டில் நிலவுகிறது. கடந்த ஆண்டில் இப்படி மூன்றாவது முறையாக குற்றம் புரிந்தோர் 688 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மதுவிலக்கு சட்டப்படி 1,07,171 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அந்த குற்றங்களிலும் தமிழ்நாடு, நாட்டில் உள்ள மாநிலங்களில் இரண்டாவது மாநிலமாகி தள்ளாடுகிறது.
குழந்தை திருமணம்
குழந்தை திருமணம் தொடர்பாக 42 வழக்குகளும் கொத்தடிமை தொழிலாளர் தொடர்பாக 15 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு அதுபோன்ற குற்றங்களிலும் தமிழகம் முன்னணி மாநிலமாகி தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி எப்படி தோற்றுவிட்டது என்பதற்கு இதெல்லாம் அடுக்கு அடுக்கான ஆதாரங்களாக அணிவகுத்து நிற்கின்றன.
திமுக ஆட்சியில்
தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழ்நாடு மக்கள் நலத்திட்டங்களிலும், தொழில்துறை முன்னேற்றத்திலும் சிறந்து விளங்கியது. ஆனால் இன்று அ.தி.மு.க. அரசு தமிழகத்தை குற்றச்செயல்களில் முன்னணி மாநிலமாக்கிவிட்டது. சமுதாயத்தில் எந்தத்தரப்பு மக்களும் அ.தி.மு.க. ஆட்சியில் பாதுகாப்பாக இல்லை என்பதும் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரிக்கிறது என்பதும் தேசியகுற்ற ஆவணகாப்பக அறிக்கை மூலம் நிரூபணம் ஆகிவிட்டது.
காவல் துறை
தமிழக காவல்துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டு அது ஆளும் கட்சியின் ஏவல் துறையாக மாற்றப்பட்டு அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. ஆகவே தான் தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகி சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கும் காரணமாக அமைந்து இருக்கிறது. ஆகவே மக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் நிலைநாட்ட அ.தி.மு.க. அரசு தன் கடமையை செய்ய வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் தமிழகம் இந்த ஆட்சியில் இழந்துவிட்ட பெருமைகளை மீட்க வழிவிட்டு கோட்டையில் இருந்து வெளியேற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.