மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு இல்லை: தமிழருவி மணியன்
சென்னை: சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு இல்லை என்றும் அப்துல் கலாம் லட்சிய இந்தியக் கட்சியுடன் காந்திய மக்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் அப்துல் கலாம் இந்திய மக்கள் கட்சி என்னும் கட்சியை சில நாட்களுக்கு முன்பு தொடங்கினார். தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கத்துடன் இணைந்து அப்துல் கலாம் இந்திய மக்கள் கட்சி சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை தமிழருவி மணியனும், பொன்ராஜும் நேற்று வெளியிட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் தமிழருவி மணியன் கூறியதாவது: காந்திய மக்கள் இயக்கமும், அப்துல் கலாம் லட்சிய இந்தியக் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. காந்திய மக்கள் இயக்கம் 25 தொகுதிகளிலும், மீதம் உள்ள 209 தொகுதிகளில் அப்துல் கலாம் இந்திய மக்கள் கட்சியும் போட்டியிடும். எனவே, மக்கள் நலக் கூட்டணி உள்ளிட்ட எந்தக் கூட்டணியிலும் அங்கம் வகிக்க வாய்ப்பில்லை என்றார்.
இதையடுத்து, அப்துல் கலாமின் முன்னாள் ஆலோசகர் பொன்ராஜ் பேசியது: 'அப்துல் கலாம் லட்சிய இந்தியா' அமைப்பின் ஆலோசகராக உள்ளேன். கட்சியினர் விருப்பப்பட்டால் தலைமை ஏற்கவும் தயாராக உள்ளேன். கலாம் பெயரில் கட்சி தொடங்குவதற்கு அவரின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது உண்மை.
காந்தி, அண்ணா, பெரியார், அம்பேத்கர் பெயரில் எல்லாம் கட்சி உள்ளது. அப்துல்கலாம் பொது மனிதர். அவரது பெயரை வைத்து இளைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர். என் சொந்த ஆதாயத்துக்காக அவர் பெயரைப் பயன்படுத்தவில்லை. அவரை தலைவராக ஏற்றுக் கொண்ட மாணவர்களை ஒருங்கிணைக்க, அவர் கண்ட கனவை நனவாக்கவே கட்சி தொடங்கப்பட்டுள்ளது என்றார்.