குண்டுகள் வெடிக்கிறது, எப்போது உயிர் போகும் என தெரியவில்லை: ஈராக்கில் சிக்கியுள்ள தூத்துக்குடி நர்ஸ்
சென்னை: ஈராக்கில் இந்திய நர்ஸுகள் பணிபுரியும் மருத்துவமனை மீது குண்டுகள் வீசப்படலாம் என்றும், தங்களின் உயிர் எப்போது போகும் என்று தெரியவில்லை என்றும் அங்கு சிக்கியுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த நர்ஸ் ரெஜிமா தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் போராடி வருகிறார்கள். பலுஜா, மொசுல் நகரை பிடித்த தீவிரவாதிகள் ஈராக்கின் முன்னாள் அதிபரான சதாம் உசேனின் ஊரான திக்ரித் நகரை கைப்பற்றினர். ஈராக் ராணுவம் திக்ரித் நகருக்குள் புகுந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி நகரை மீட்டது. அந்த நகரில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 46 நர்ஸுகள் உள்ளனர்.
நகரை ராணுவம் மீட்டுள்ள நிலையிலும் இந்திய நர்ஸுகள் மருத்துவமனையில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திக்ரித் நகரில் சிக்கியுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த நர்ஸ் ரெஜிமா தொலைபேசி மூலம் தமிழக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில்,
இந்தியாவை சேர்ந்த நர்ஸுகள் உள்ள திக்ரித் போராட்டக்காரர்களின் பிடியில் உள்ளது. மருத்துவமனையில் டாக்டர்கள், நோயாளிகள் என்று யாரும் இல்லை. நாங்கள் இந்திய நர்ஸுகள் மட்டுமே உள்ளோம். மருத்துவமனை வளாகத்தில் குண்டுகள் வீசப்பட்டன. நேற்று திக்ரித் மருத்துவமனை வளாகத்தில் இரண்டு குண்டுகள் வெடித்தன. நாங்கள் உள்ள மருத்துவமனையிலும் எந்நேரத்திலும் குண்டுகள் வீசப்படலாம். எங்கள் உயிர் எப்போது போகப் போகிறது என்று தெரியவில்லை என்றார்.
மருத்துவமனையில் சிக்கியுள்ள மற்றொரு இந்திய நர்ஸான மரினா ஜோஸ் பிபிசிக்கு தெரிவிக்கையில்,
இரவு முழுவதும் மருத்துவமனையை சுற்றி குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது. ஹெலிகாப்டர்களில் இருந்து குண்டுகளை வீசுகிறார்கள். இங்கு எங்களால் ஒரு நாள் கூட இருக்க முடியாது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு செஞ்சிலுவை சங்கத்தினர் வந்து பாக்தாத் செல்லும் சாலைகள் சரியானதும் எங்களை அழைத்துச் செல்வதாக கூறினர். தயவு செய்து எங்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லுங்கள் என்றார்.
ஆனால் திக்ரித்தில் உள்ள இந்திய நர்ஸுகள் பாதுகாப்பாக உள்ளார்கள் என்றும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் இன்று தெரிவித்தார்.