திடீர்னு மழை வந்து வெள்ள சேதம் ஆகிப் போச்சு.. அரசை குறை சொல்ல கூடாது.. இது நாட்டாமை பேச்சு
தென்காசி: கனமழையால் ஏற்பட்ட வெள்ள சேதத்தை அரசியலாக்க வேண்டாம் என சமக தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
தென்காசியில் சட்டமன்ற உறுப்பினரும், சமக தலைவருமான சரத்குமார் செவ்வாய்க்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தென்காசி நகராட்சிப் பகுதியில் 18 ஆயிரத்து 671 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்ரை வழங்கினார். பின்னர் தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு சென்று அங்கு நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அங்கிருந்து அவர் வெளியே வரும் போது பொதுமக்கள் சிலர் மருத்துவமனையில் சுகாதாரம் இல்லை என்றும், துர்நாற்றம் வீசுவதாகவும் குற்றம் சாட்டினர். அது விரைவில் சீர் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். பின்னர் தென்காசி நெல்லை சாலையில் உள்ள டீக்கடைக்கு சென்ற அவர் அங்கு டீ குடித்தார். அதனைத் தொடர்ந்து பழைய குற்றாலம் மத்தாளம் பாறை சாலையில் திங்கட்கிழமை மழையால் சேதம் அடைந்த உப்பனான் குளம் பகுதியையும், தண்ணீரால் சேதம் அடைந்த வயல் வெளிகளையும் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் திடீர் என ஏற்பட்ட மழை காரணமாக வெள்ள சேதம் உருவானது. இதனை யாரும் குறைகூற முடியாது. இயற்கை சீற்றம் எப்போது வரும் என்பது தெரியாது. இருந்தாலும் தமிழக அரசு போர்க்கால நடவடிக்கையை மேற்கொண்டு நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டு தீர்வை கண்டு வருகிறது. இதனை அரசியல் ஆக்காமல் மக்களின் நிலையை புரிந்து அரசோடு ஒத்துழைத்து நிவாரப் பணிகளை அனைவரும் ஒன்றிணைந்து செய்ய வேண்டும்.
அரசியல் கட்சிகள் தவறான குற்றச்சாட்டுக்களை கூறுவது நல்லதல்ல. இது போன்ற சூழலில் வருமுன் காப்போம் என்ற நிலையில் அனைவரும் இருக்க வேண்டும். இனி வரும் காலங்களில் பொதுமக்கள் தாழ்வான பகுதிகளில் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். தென்காசி பகுதிகளில் வெள்ள சேதம் குறைவு தான் என்றாலும் வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் அதிகாரிகளிடம் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications